எல்லாவற்றையும் இழந்த லட்சுமி அம்மாள்.. கைவிட்ட பிள்ளைகள்.. கை கொடுத்து உதவிய கலெக்டர் பல்லவி
தேனி: கலெக்டர் பல்லவியை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.. மகன்கள் கைவிட்டதால் தவித்து கிடந்துள்ளார் வயது முதிர்ந்த பெண் ஒருவர்.. அவரை இல்லத்தில் சேர்த்துள்ளதுடன், சம்பந்தப்பட்ட மகன்களை விசாரிக்கவும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார் தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ்!
உசிலம்பட்டி சிம்பு செட்டி தெருவை சேர்ந்தவர் லட்சுமி அம்மாள். இவரது கணவர் முத்தையா பல வருஷத்துக்கு முன்பே இறந்துவிட்டார். 2 மகன்கள் இருக்கிறார்கள். மூத்த மகன் பாஸ்கரன் மதுரையிலும், இளைய மகன் பாண்டி சென்னையிலும் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். ஆனால் லட்சுமி அம்மாளை இவர்கள் கவனிப்பதே இல்லை.

ஒரு வாடகை வீட்டில், அரசு முதியோர் உதவித் தொகையை வைத்து வாழ்ந்து வந்தார் லட்சுமி அம்மாள். ஒரு வருஷத்துக்கு முன்பு ஆண்டிபட்டியில் வசித்த மகள் இறந்துவிட்டதால், அங்கேயே தங்கினார். ஆனால் மகளின் வீடும் விற்கப்பட்டது. வீட்டை காலி செய்த லட்சுமி அம்மாளுக்கு முதியோர் உதவி தொகையும் நின்றுபோய்விட்டது.
மகன்கள் ஆதரவு, உதவி தொகை, வீடு, வாசல், இப்படி எதுவுமே இல்லாத நிலைக்கு ஆளானார் லட்சுமி அம்மாள். மகன்களுக்கு போன் பண்ணினாலும் யாருமே எடுத்து பேசுவதும் கிடையாது. இந்நிலையில், லட்சுமி அம்மாள், தேனி மாவட்ட கலெக்டர் பல்லவியிடம் ஒரு மனு தந்துள்ளார். அதில், தன்னை முதியோர் இல்லத்தில் சேர்க்க உதவ வேண்டும் என்று கேட்டிருந்தார்.
அதன்படி, லட்சுமி அம்மாளை கொடுவிளார்பட்டி முதியோர் காப்பகத்தில் சேர்க்க கலெக்டர் பல்லவி உத்தரவிட்டார். இத்தோடு கலெக்டர் விடவில்லை.. லட்சுமி அம்மாளின் மகன்கள் இருவரையும் வரவழைத்து விசாரிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
விசாரணை முடிவில், மகன்கள் மீது எந்தவித நடவடிக்கையை கலெக்டர் மேற்கொண்டாலும், அது பெற்ற தாய்-தகப்பனை கவனிக்காத மற்ற பிள்ளைகளுக்கும் ஒரு பாடமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டதுடன், தன் கடமை முடியவில்லை என்று நினைக்காமல், மகன்களையும் விசாரிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளது, பெரிய பரபரப்பை தேனியில் ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications