தேனி கழிவறையில் எறும்பு இப்படியா கடிக்கும்? அரசு கல்லூரி மாணவருக்கு ஆசனவாயில் பாதிப்பு? ஒரே பரபரப்பு
தேனி: தேனி அரசு பொறியியல் கல்லூரியில் திருநெல்வேலி மாணவன், ஹாஸ்டல் பாத்ரூமில் மர்மமான முறையில் உயிரிழந்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி வருவதாக, மாணவன் குடும்பத்தினர் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.. மற்றொருபுறம் இதுகுறித்து காவல்துறையும் விளக்கம் ஒன்றை தந்துள்ளது.
நெல்லை மாவட்டம் பர்கிட் மாநகர் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரின் 21 வயது மகன் விக்னேஷ், தேனி மாவட்டம், போடி அரசு பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி இ.சி.இ. 3ம் வருடம் படித்தார்... செமஸ்டர் தேர்வு தற்போது நடந்துவரும் நிலையில் விக்னேஷ், சம்பவத்தன்று ஹாஸ்டலிலுள்ள கழிவறைக்கு சென்றிருக்கிறார்.

ஆனால், அவர் நீண்ட நேரமாக திரும்பி வராததால், சந்தேகம் அடைந்த சகமாணவர்கள், ஹாஸ்டல் வார்டனுடன் சேர்ந்து கழிவறைக்கு சென்று பார்த்துள்ளனர்.. ஆனால், கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. இதனால் கதவை தட்டி தட்டி பார்த்தும், திறக்காததால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளனர்.. அங்கே விக்னேஷ் ரத்த காயத்துடன் சடலமாக விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சிபிசிஐடி விசாரணை தேவை
இதையடுத்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாணவனின் உடல் கைப்பற்றப்பட்டு, தேனி அரசு மருத்துவமனைக்கு, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து, தங்கள் மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாககூறி, பெற்றோர் போலீசில் புகார் தந்தனர்.. இந்த புகாரின்பேரில் விசாரணையும் நடக்கிறது.. எனினும், போலீசார் மேற்கொள்ளும் விசாரணை, தங்களுக்கு திருப்தியாக இல்லை, நியாயமாக விசாரணை வேண்டும், இதற்காக சிபிசிஐடி இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை உயிரிழந்த விக்னேஷ் குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலெக்டரிடம் சென்ற 5 பேர்
இந்த போராட்டத்தினால் அந்த பகுதியே ஸ்தம்பித்துவிட்டது.. உடனடியாக போலீசார் போராட்டக்காரர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, மாணவன் விக்னேஷ் குடும்பத்தினர் உள்ளிட்ட 5 நபர்களை மட்டும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க ஏற்பாடு செய்தனர். பிறகு, கோரிக்கைகள் அடங்கிய மனுவை உயிரிழந்த விக்னேஷின் தந்தை செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து சிபிசிஐடி விசாரணைக்கு வலியுறுத்தியிருக்கிறார்கள்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற திடீர் போராட்டத்தின் காரணமாக, அங்கிருந்த சாலையில் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தனர் என்றாலும், இந்த போராட்டம் தேனி மக்களின் கவனத்தை திருப்பியிருக்கிறது.
எறும்பு கடித்து மரணமா
கழிவறைக்கு சென்ற மாணவனுக்கு ரத்த காயங்கள் உடலில் எப்படி ஏற்பட்டிருக்கும் என்பதே, பெற்றோரின் சந்தேகமாக உள்ளது. காரணம், பெற்றோர், மகனின் உடலை பார்த்தபோது, கழுத்து, காது ஆகிய பகுதிகளில் காயங்கள் இருந்துள்ளன.. அதேபோல, ஆசனவாய் பகுதியிலும் ரத்த காயங்கள் இருந்ததாக கூறுகிறார்கள்..
ஆனால், மாணவருக்கு கழிவறைக்குள் வலிப்பு ஏற்பட்டு, அதனால் கீழே விழுந்து ரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும், மாணவரின் உடலை மீட்கும்போது உடலில் எறும்புகள் கடித்திருந்ததால் காயங்கள் உண்டாகியதாகவும் போலீசார் தரப்பில் தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக இறந்த மாணவரின் தாயார் வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார். அந்தவகையில், போலீசாரின் இந்த விளக்கத்தையும் பெற்றோர் ஏற்க மறுத்து, தொடர்ந்து உரிய விசாரணையை கோரி வருகிறார்கள்.
சினிமாவில் காட்டினால்கூட நம்ப மாட்டாங்க
முன்னதாக, மாணவரின் இறப்பு சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் கண்டனம் தெரிவித்திருந்தார்.. "எறும்பு கடித்து கல்லுாரி மாணவர் இறந்ததாக கூறுவதை, சினிமாவில் காட்சியாக வைத்தால்கூட யாரும் நம்ப மாட்டார்கள்.. பட்டியலினத்தைச் சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரியான மாணவர் விக்னேஷின் மரணத்தில், உண்மையான காரணத்தை மறைத்து திசைதிருப்ப, திமுக அரசு முயற்சித்தால் அது கடும் கண்டனத்திற்குரியது" என்றும் காட்டமாக கூறியிருந்தார்.
காவல்துறை விளக்கம்
இந்நிலையில், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அதில், "மாணவர் உயிரிழப்பில் போலீசாருக்கு எந்த சந்தேகமும் கிடையாது. மாணவர் உயிரிழந்தது குறித்து டிஎஸ்பி தலைமையில் அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்யப்பட்டு மாணவரின் பெற்றோருக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரது பெற்றோர் சிபிசிஐடி விசாரணை வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர்." என்றார்.
ஆக, உண்மையிலேயே மாணவன் எறும்பு கடித்து இறந்தாரா? கழிவறை முழுவதும் ரத்த காயங்கள் கிடப்பதாக பெற்றோர் சொல்கிறார்களே? மாணவனின் உடம்பில் பல இடங்களில் காயங்கள் இருந்ததாகவும் கூறுகிறார்களே? என்கிற பல கேள்விகள் தேனி மக்களை துளைத்தெடுத்து கொண்டிருக்கின்றன.. இதனிடையே, சாதிய ரீதியான பிரச்சனையாகவும் அரசியல் கட்சிகள் மாணவனின் சம்பவத்தை முன்னிறுத்துவதால், தேனியில் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications