சென்னை டூ தேனி.. சொகுசு காரில் கோடிக்கணக்கில் பணம்.. ஆவடியில் இருந்து வந்தவருக்கு அல்வா
தேனி: தேனியில் சொகுசு காரில் ரூ.3.5 கோடி மதிப்புள்ள கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், இதில் பண இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்த 2000 நோட்டுகளை கமிஷன் அடிப்படையில் மாற்றித்தருபவரிடம் மோசடி செய்தது உறுதியானது. அவர்களின் சொகுசுகார்களில் பல லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை ஆவடி நாகம்மை நகரை சேர்ந்த 40 வயதாகும் தவச்செல்வம் என்பவர் ரிசர்வ் வங்கி செல்லாது என்று அறிவித்த ரூ.2,000 நோட்டுகளை கமிஷன் அடிப்படையில் ரிசர்வ் வங்கியில் மாற்றிக் கொடுக்கும் வேலையை செய்து வந்திருக்கிறார்.கடந்த சில மாதம் முன்பு தவச்செல்வத்துக்கு தேனி பொம்மையகவுண்டன்பட்டி பாலன் நகரை சேர்ந்த 36 வயதாகும் கேசவன் என்பவர் அறிமுகம் ஆனார்.

கேசவன் தன்னிடம் பல லட்சம் மதிப்பில் ரூ.2,000 நோட்டுகள் இருப்பதாகவும், அதை மாற்ற முடியாமல் வைத்திருப்பதாக கூறியிருக்கிறார். அதை மாற்றிக் கொடுத்தால் நிறைய கமிஷன் தருவதாகவும், ரூ.10 லட்சம் கொடுத்தால் அதற்கு இரட்டிப்பாக ரூ.20 லட்சத்துக்கான ரூ.2,000 நோட்டுகளை கொடுப்பதாகவும் கேசவன் ஆசைவார்த்தைகள் கூறினாராம்.
இதனால் பணம் இரட்டிப்பு கிடைக்கும் என்ற ஆசையில், தவச்செல்வம் தன்னிடம் இருந்த ரூ.10 லட்சத்து 75 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு சென்னை ஆவடியில் இருந்து தேனிக்கு வந்துள்ளார். அங்கு தவச்செல்வம் பணத்துடன் காத்திருந்தபோது, கேசவன் ஒரு சொகுசு காரில் அங்கு வந்தாராம். அவருடன் கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்த சேகர்பாபு (45), கனிராஜா ஆகிய 2 பேரும் இருந்துள்ளார்கள்.
அவர்கள் தவச்செல்வத்தை பணப்பையுடன் காரில் ஏறுமாறு கூறியிருக்கிறார்கள். பின்னர் பழனிசெட்டிபட்டி வரை அழைத்துச் சென்றனர். அவரிடம் இருந்த பணத்தை அவர்கள் பெற்றுக் கொண்டு, சிறிது நேரம் அங்கேயே காத்திருக்குமாறு கூறியிருக்கிறார்கள். ரூ.2,000 நோட்டுகளை எடுத்து வருவதாகவும் கூறிவிட்டுச் சென்ற சேகவன் சேகர்பாபு கூட்டாளிகள், பணத்தை எடுத்துவரவில்லை. நீண்ட நேரமாக காத்திருந்தும் பணத்துடன் சென்றவர்கள் திரும்பி வராத பின்னரே 3 பேரும் ஏமாற்றிவிட்டதை தவச்செல்வம் உணர்ந்தார்.
இதுகுறித்து தேனி நகர் காவல் நிலையத்தில் தவச்செல்வம் புகார் செய்தார். இந்த விவகாரம் மாவட்ட எஸ்பி அந்த சம்பவத்தில் சிவபிரசாத் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து தேனி டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில், இன்ஸ்பெக்டர் உதயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் தீவிரமாக வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது தவச்செல்வம் புகாரில் தெரிவித்து இருந்த பதிவு எண் கொண்ட சொகுசு கார் அந்த வழியாக வந்து கொண்டு இருந்தது. அந்த காரை போலீசார் நிறுத்திய போது அதை சேகர்பாபு ஓட்டி வந்துள்ளார். அவரை போலீசார் மடக்கிப் பிடித்து அவர் வந்த காரில் சோதனையிட்டனர். அப்போது அந்த காரில் கட்டுக்கட்டாக ரூ.2,000 நோட்டுகள் இருந்தன. அதில் மொத்தம் ரூ.3 கோடியே 40 லட்சம் மதிப்பில் கள்ளநோட்டுகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சேகர்பாபுவை போலீசார் கைது செய்ததுடன், அவர் ஓட்டி வந்த கார் மற்றும் அதில் இருந்த கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் கேசவனையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் 2 கார்கள், ரூ.14 லட்சம் மற்றும் 16 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், இந்த கள்ளநோட்டுகள் அனைத்தும் ஓசூர் பகுதியில் அச்சடித்து வாங்கிய கலர் ஜெராக்ஸ் என்பது தெரியவந்தது.
ஒரே சீரியல் நம்பரில் இருந்ததால் அதனை கள்ளநோட்டு என்பதை பார்த்த உடனேயே போலீசார் கண்டுபித்தனர். . விசாரணைக்கு பின்னர் கேசவன், சேகர்பாபு ஆகிய 2 பேரையும் தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் நேற்று ஆஜர்படுத்தி தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கனிராஜாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். போலீசார் பறிமுதல் செய்த 3 கார்களில், 2 சொகுசு கார்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் புதிதாக வாங்கப்பட்டுள்ளது. அந்த 2 கார்களும் கடந்த ஜூன் மாதம் ஒரே நாளில் தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது.












Click it and Unblock the Notifications