பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள்.. கண்மூடி திறப்பதற்குள் நடந்த கொடூரம்! கேரள இளைஞர் கைது
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பஸ்சுக்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள் 3 பேர் கார் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஜித் குமார் என்ற கேரளாவை சேர்ந்த இளைஞர் தாறுமாறாக ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்ததில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறி விட்டது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே க. விலக்கு பேருந்து நிலையத்தில் நேற்று பயணிகள் சில பஸ்சிற்காக காத்து நின்றனர். அப்போது கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்த அஜித் குமார் என்ற 28 வயது வாலிபர், காரில் தேனியில் இருந்து வந்துகொண்டிருந்தார்.

இடித்து தள்ளிய கார்
அப்போது திடீரென அவரது கார் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் சாலையில் தாறுமாறாக ஓடிய கார் செண்டர்மீடியனை இடித்து தள்ளியபடி சீறிப்பாய்ந்து வந்தது. இறுதியில் க.விலக்கு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் மீதும் மோதி இடித்து தள்ளியபடி சென்றது. இந்த விபத்தில் பஸ்சுக்காக காத்து நின்ற 4 பயணிகள் படுகாயமடைந்தனர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை அங்கிருந்தவர்கள் மற்றும் தகவல் அறிந்து வந்த போலீசார் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கண்டமனூர் வேலாயுதபுரத்தை சேர்ந்த பால்ராஜ் (வயது 75), தங்கப்பாண்டி மனைவி செல்வம் (50), ஏரதிமக்காள் பட்டியை சேர்ந்த மாரியம்மாள் (60) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.
கேரள இளைஞர் கைது
அரசரியை சேர்ந்த பாக்கியலட்சுமி (39) என்பவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காரை அதிவேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக அஜித்குமாரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பேருந்து நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் கார் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications