சில்லு சில்லாய் நொறுங்கிடுமோ பிஜேபி கனவு? எடப்பாடி பக்கம் வந்த டிடிவி தினகரன்.. சிக்கலே இனிமேல்தான்
தேனி: டிடிவி தினகரன் மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார்.. இப்படி இணைந்திருப்பதை அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்துள்ளார்.. இதனால் முக்குலத்தோர் வாக்கு வங்கி அரசியலில் ஒரு முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது. அதேசமயம், டிடிவி தினகரன் வருகை அதிமுக-பாஜக கூட்டணிக்கு எந்த அளவுக்கு பிளஸ் பாயிண்ட்டாக இருக்க போகிறது? குறிப்பாக எடப்பாடி பழனிசாமி, தினகரன் இருவரின் அரசியல் இனி ஒரே கூட்டணியில் எப்படி நகர போகிறது? தெரியவில்லை.
அமமுக கட்சியானது, அதிமுக, பாஜக கூட்டணிக்குள் இணைந்துவிட்டதாலேயே, இதை "முழு வாக்கு மாற்றம்" என்று சொல்ல முடியுமா தெரியவில்லை..

முக்குலத்தோர் வங்கி முழுமையாக செல்லுமா
அதாவது தினகரன் கூட்டணிக்குள் வந்ததாலேயே முக்குலத்தோர் சமூகத்தின் அனைத்து வாக்குகளும் அதிமுக-பாஜக பக்கம் திரும்பிவிடும் என்றும் சொல்வதற்கில்லை.. அதேசமயம் பெரிய அளவிலான வாக்குகளை கூட்டணிக்குள் டிடிவி கொண்டு வருவார் என்றாலும் முழுமையாக கொண்டு வர வாய்ப்பில்லை.. காரணம், அந்த சமூகத்திற்குள்ளேயே அரசியல் விருப்பங்கள் பல ஆண்டுகளாக பிரிந்து உள்ளன.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, தென் தமிழகத்தில் குறிப்பாக சில மாவட்டங்களில், தினகரன் ஒரு அரசியல் அடையாளமாக உருவானார். அமமுக தொடங்கிய காலத்தில், முக்குலத்தோர் மத்தியில் அவருக்கு ஒரு உணர்ச்சிப்பூர்வமான ஆதரவு உருவானது.
அந்த ஆதரவு பெரிய அளவில் இல்லாவிட்டாலும், தேர்தல் முடிவை மாற்றக்கூடிய அளவில் இருந்தது. இதன் காரணமாகவே கடந்த சில தேர்தல்களில், அதிமுகவும் அமமுகவும் தனித்தனியாக போட்டியிட்டபோது, ஒரே சமூகத்தைச் சேர்ந்த வாக்குகள் இரண்டாக பிளந்தன. அந்த வாக்கு பிளவுதான் பல இடங்களில் திமுகவுக்கு சாதகமாக மாறியது.
இப்போது தினகரன் என்டிஏ கூட்டணியில் சேர்ந்திருப்பதால், அந்த வாக்கு பிளவு குறையும் வாய்ப்பு அதிகம். இதுவே அதிமுக-பாஜக கூட்டணிக்கு கிடைக்கும் முக்கியமான அரசியல் பலனாகும்..
எடப்பாடி பழனிசாமி - தினகரன்
தினகரன் தனியாக நின்று அதிக வாக்குகளை வெல்லப் போகிறார் என்பதைவிட, அவர் கொண்டு வரும் சிறிய சதவீத வாக்குகளே பல தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்கக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக தென் தமிழகத்தில், சிறிய வாக்கு வித்தியாசத்தில் முடிவு மாறும் தொகுதிகளில், இந்த மாற்றம் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஆனால் இங்கே ஒரு பெரிய சந்தேகம் எழுகிறது.. தினகரனுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையிலான உறவு இன்னும் சீராக இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
என்டிஏ கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு, "அது அனைவருக்கும் தெரியும்" என டிடிவி தினகரன் பதிலளிப்பதிலயே அது தெளிவாக தெரிகிறது..
ஏற்கனவே அதிமுக தலைமையுடன் டிடிவி தினகரனுக்கு கடந்த காலத்தில் ஏற்பட்ட மோதல்கள் அனைவருக்கும் தெரிந்ததே. அதனால் தான், ஒரே கூட்டணியில் இருந்தாலும் மனதளவில் இருவரும் இன்னும் ஒன்றாகவில்லை என்ற கருத்து இன்று மீண்டும் வலுப்பெற்றுள்ளது...
பெயரைகூட சொல்லலயே
ஒரு கூட்டணியில் இருக்கும்போது, தலைமைக்கு மரியாதை காட்டுவது அரசியல் மரபாகும்.. ஆனால், பெயரையே சொல்ல மறுப்பது, "நான் இந்த தலைமையை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை" என்ற மறைமுக செய்தியாகவே பார்க்கப்படுகிறது.
இது எதிர்காலத்தில் கூட்டணிக்குள் உள்ள ஒற்றுமையை கேள்விக்குறியாக மாற்றக்கூடும்.. . தேர்தல் நேரங்களில், மேடையில் ஒன்றாக நிற்க வேண்டிய சூழலும் வரும்.. ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமியும், டிடிவி தினகரனும் சந்திக்க வேண்டிய சூழல் வந்தால் என்ன நடக்கும்? ஒருவரை ஒருவர் புறக்கணிப்பார்களா, அல்லது கட்டாய சிரிப்புடன் அரசியல் நடிப்பை தொடர்வார்களா என்ற கேள்வியும் நமக்குள் எழுகிறது.
எதிர்க்கட்சிக்கு சான்ஸ்
இப்படியான மனநிலைமை, முக்குலத்தோர் வாக்காளர்களிடையே குழப்பத்தை உருவாக்கலாம்... ஏனென்றால் அரசியல் கணக்குகளை விட, மக்களின் மனநிலையே முக்கியம். தலைவர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இல்லை என்று மக்கள் நினைத்தால், வாக்குகள் முழுமையாக மாற்றம் அடையாமல் சிதற வாய்ப்பும் இருக்கிறது.
அதுமட்டுமல்ல, உள்ளுக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும், தேர்தல் வரை கூட்டணியை ஒற்றுமையாக காட்டினால் போதும் என்பதே பாஜக கணக்காக இருந்தாலும், இந்த தலைவர்களை சமாளிப்பது பாஜக தலைமைக்கும் ஒரு பெரிய சவாலாக மாறி உள்ளது.
எப்போதுமே அரசியலை பொறுத்தவரை, சிறிய கருத்து வேறுபாடுகளே பெரிய அரசியல் வெடிப்பாக மாறலாம். அந்தவகையில் தேர்தல் நெருங்கும் நேரத்தில், இத்தகைய உள்கட்சிப் பிளவுகள் எதிர்க்கட்சிகளுக்கு பலமாக மாறவும் வாய்ப்புள்ளது..
சின்ன விஷயத்தில் கோட்டை
எனவே இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி பெயரை தினகரன் பெயரளவுக்காவது சொல்லியிருக்கலாமே? இவ்வளவு கனகச்சிதமாக கூட்டணிக்கு பிளான் செய்தும், இந்த சாதாரண விஷயத்தை கோட்டை விட்டுவிட்டாரே? என்று அமமுக நிர்வாகிகளே பேச ஆரம்பித்துள்ளனர்..!
மொத்தத்தில், எடப்பாடி பெயரை சொல்ல மறுத்த டிடிவி தினகரனின் செயல், தமிழக அரசியலில் ஒரு "மௌன அரசியல்" தொடங்கிவிட்டதையே காட்டுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்...!!!












Click it and Unblock the Notifications