விஜய்யை அட்டாக் செய்த துரைமுருகன்.. நாதக கூட்டத்தில் புகுந்த தவெகவினர்.. அடுத்து நடந்த சம்பவம்!
தேனி: தேனி மாவட்டம் பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற நாதக பொதுக்கூட்டத்தில் சாட்டை துரைமுருகன் பேசிக் கொண்டிருந்த போது, திடீரென தவெக தொண்டர்கள் கூச்சலிடத் தொடங்கினர். இதனால் கொந்தளித்த சிலர், தவெக நிர்வாகியின் கார் கண்ணாடியை உடைத்தனர். இதனால் இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாதகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர் சாட்டை துரைமுருகன். சீமானுடன் நெருங்கி பயணித்து வரும் இவர், தன்னுடைய யூடியூப் சேனலில் விஜய்யையும், தவெகவையும் தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார். விஜய்யின் பேச்சு, அறிக்கை, தேர்தல் சின்னம், தவெக தொண்டர்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை வைத்து சாட்டை துரைமுருகன் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

சாட்டை துரைமுருகனின் நக்கல், நய்யாண்டி பேச்சு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சியினர் மத்தியிலும் டிரெண்டாகியது. சோசியல் மீடியாவில் தவெகவின் அலப்பறையை சாட்டை துரைமுருகனை கொண்டே எளிதாக அத்தனை கட்சியினரும் கையாண்டு வந்தனர். ஒரு கட்டத்தில் தவெக ஆதரவாளர்கள் பலரும் சாட்டை துரைமுருகனுக்கு சோசியல் மீடியாவில் மிரட்டல் விடுத்து வந்தனர்.
இன்னொரு பக்கம் தவெக செய்தித் தொடர்பாளர் ராம் குமார் உள்ளிட்டோர் சாட்டை துரைமுருகனை புறக்கணித்துவிட்டு வேறு பணிகளை செய்யுங்கள் என்று அக்கட்சி தொண்டர்களுக்கு வலியுறுத்தும் நிலை உருவாகியது. விஜய்யின் சினிமா வாழ்க்கையை பற்றி சாட்டை துரைமுருகன் புகழ்ந்து பேசி வந்தாலும், அவரின் குடும்பம் மற்றும் அரசியல் வாழ்க்கை தொடர்பாக பேசியது தவெகவினரை கொந்தளிக்க வைத்திருக்கிறது.
இந்த நிலையில் தேனியில் நடைபெற்ற நாதக பொதுக்கூட்டத்தில் சாட்டை துரைமுருகன் சிறப்பு பேச்சாளராக பங்கேற்றுள்ளார். தேனி மாவட்டம் பங்களாமேடு பகுதியில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது சாட்டை துரைமுருகன் பேசிய போது, திடீரென அங்கு வந்த தவெகவினர் கூச்சலிடத் தொடங்கினர்.
அப்போது சாட்டை துரைமுருகன், உங்களுக்கு துணிவு இருந்தால்,. நாளை இதே இடத்தில் விஜய் என்ன செய்தார் என்று பேசுங்கள் என்று சவால் விடுத்தார். சில கொச்சையான வார்த்தைகளையும் சாட்டை துரைமுருகன் பேச, சூழல் பதற்றமானது. இதன்பின் தவெக மாவட்டச் செயலாளர் லெஃப்ட் பாண்டி குறித்தும் விமர்சித்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் விசில் அடித்த சில தவெகவினரால் நாதகவினர் கொந்தளித்தனர்.
இதன்பின் தவெக நிர்வாகிகள் கார்களில் வர, அவர்களை நாதகவினர் மடக்கி பிடித்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில் தவெக நிர்வாகியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதன் காரணமாக நாதக - தவெக இடையில் மோதல் ஏற்பட்டது. சில நிமிடங்கள் பரபரப்பாக இருந்த நிலையில், போலீசார் அனைவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications