தேனி அருகே மைல்கல்லின் மீது மோதி, சாக்கடை கால்வாயில் பாய்ந்த பைக்.. 2 கல்லூரி மாணவர்கள் பலி
தேனி: தேனி-திண்டுக்கல் பைபாஸ் சாலையில் சாக்கடை கால்வாய்க்குள் இரு சக்கர வாகனம் பாய்ந்து கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்து போனார்கள். இந்த சம்பவம் தேனி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது, அதிவேகத்தில் பயணிப்பது சில நேரங்களில் ஆபத்தில் முடிகிறது. எவ்வளவு கவனமாக சாலைகளில் சென்றாலும், வாகனங்கள் விபத்தில் சிக்குவது நடக்கிறது. பொதுவாக வளைவுகளில் வாகனங்களில் செல்வோர் வேகத்தை குறைத்து ஹாரன் அடித்து எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்.

அப்படி ஹாரன் அடிக்காமல், எதிர்வரும் வாகனத்தை கவனிக்காமல் சென்றாலோ அல்லது வளைவுகளில் உள்ள பள்ளத்தை கவனிக்காமல் சென்றாலோ பேராபத்தில் முடிய வாய்ப்பு உள்ளது. சிறு அலட்சியமோ, கவனக்குறைவோ சாலையில் விபத்தை ஏற்படுத்தி மரணம் வரை கொண்டு செல்லும். இதற்கு உதாரணமாக பல சம்பவங்களை குறிப்பிடலாம். அப்படி ஒரு சம்பவம் தேனி பகுதியில் நடந்துள்ளது.
தேனி மாவட்டம் வடுகப்பட்டி ஜெயந்தி காலனியை சேர்ந்த செல்லப்பாண்டி என்பவருடைய மகன் 19 வயாகும் அஸ்வின், பெரியகுளம் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார் . அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் யுவராஜா (19). இவரும் அஸ்வின் உடன் அதே கல்லூரியில் ஒன்றாக படித்து வந்தார். ஒரே வகுப்பில் படிக்கும் இவர்கள் பள்ளி காலம் முதலே நண்பர்கள் ஆவர்.
இந்நிலையில் அஸ்வினும், யுவராஜாவும் திங்கள்கிழமை காலை வடுகப்பட்டியில் இருந்து இருசக்கர வாகனத்தில் தேனிக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் வடுகப்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். இருசக்கர வாகனத்தை அஸ்வின் ஓட்டினார். யுவராஜா பின்னால் அமர்ந்திருந்தார்.
தேனி-திண்டுக்கல் பைபாஸ் சாலையில் இரு சக்கர வாகனம் வந்து கொண்டிருந்தனர். சேடப்பட்டி பகுதியில் உள்ள வளைவில் இருசக்கர வாகனத்தை அஸ்வின் திருப்ப முயன்றுள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக அங்குள்ள மைல்கல்லின் மீது அவர்களது பைக் பயங்கரமாக மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய பைக், அருகே உள்ள பாலத்தில் மோதி சாக்கடை கால்வாய்க்குள் பாய்ந்தது.
இதில் படுகாயமடைந்த 2 பேரும் சாக்கடை கால்வாய்க்குள்ளேயே பரிதாபமாக இறந்து போனார்கள். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications