தேனி அருகே 'உங்களுடன் ஸ்டாலின்'.. பட்டா மாறுதல் மனு அளித்தவர்களுக்கு காத்திருந்த ட்விஸ்ட்
தேனி: தேனி அருகே "உங்களுடன் ஸ்டாலின்" மக்கள் முகாம் செல்போன் பயன்படுத்தி கொண்டே அலட்சியத்துடன் அலுவலர்கள் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் கோரிக்கை மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு முறையான இருக்கை வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். இதேபோல் தேனி அருகே கூடலூரில் கடந்த மூன்று நாள் முன்பு நடந்த முகாமில் பலர் பட்டா மாறுதல் தொடர்பான மனுக்களை வழங்கினர். அவர்களும் சில குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
தேனி மாவட்டத்தில் "உங்களுடன் ஸ்டாலின்" மக்கள் முகாம் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு பகுதிகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அமச்சியாபுரம் கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் "உங்களுடன் ஸ்டாலின்" மக்கள் முகாம் நடைபெற்றது. இதில் அமச்சியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், மகளிர் உரிமைத்தொகை, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்து வருகிறார்கள்.

இந்த முகாமிற்கு வரும் பொதுமக்களின் மனுக்களை பெறுவதற்கு துறை சார்ந்த அலுவலர்கள் காலதாமதம் ஏற்படுத்துவதாகவும், மற்றும் அலுவலர்கள் தங்களது செல்போனில் சமூக வலைதளத்தில் மூழ்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் கோரிக்கை மனு கொடுக்க வரும் பெண்கள், கர்ப்பிணிகள் கோரிக்கை மனுவை கொடுப்பதற்கு நீண்ட நேரம் காத்திருப்பதால் அவர்களுக்கு முறையான இருக்கை வசதிகள் செய்து தரப்படாததால் கடும் அவதி அடைந்தனர்
"உங்களுடன் ஸ்டாலின்" என்ற பெயரில் பொதுமக்களின் பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்படும் என கூறும் நிலையில், முகாமில் உள்ள அலுவலர்கள் அலட்சியமுடன் இருப்பதால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என முகாமிற்கு வந்தவர்கள் குற்றம்சாட்டினார்கள்.
இதேபோல் தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. முகாமில் கலந்து கொண்ட பலர் பட்டா மாறுதல் தொடர்பான மனுக்களை வழங்கினர். பின்னர் அந்த மனுக்கள் இணையதளத்தில் பதிவேற்ற பட்டு ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டிருக்கிறது. இந்தநிலையில் நேற்று தனியார் இ-சேவை மையங்கள் மூலம் பட்டா மாறுதல்களுக்கு விண்ணப்பித்த பொதுமக்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களுடைய மனுக்களை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என வரவழைத்து அவர்களிடம் இருந்து ரூ.100 பெற்றுக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், முகாமில் தாங்கள் கொடுக்கும் மனுக்களை சரிபார்த்து ஆன்லைன் மூலம் ஏற்றி கைபேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி விடுகின்றனர். பின் எதற்கு தனியார் இ-சேவை மையங்களுக்கு வரவழைத்து கட்டணமாக ரூ.100 வாங்குகின்றனர். அதிகாரிகளிடம் வழங்கிய மனுக்கள் தனியார் இ-சேவை மையங்களுக்கு எப்படி வருகிறது என்று தெரியவில்லை. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நேரில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.












Click it and Unblock the Notifications