மாநிலங்களுக்கு இடையே மத்திய அரசு பாகுபாடு பார்க்கவில்லை - பட்ஜெட் குறித்து ஓ பன்னீர் செல்வம் கருத்து
தேனி: மத்திய பட்ஜெட் நல்ல பட்ஜெட். நாட்டை அடுத்த 10 ஆண்டுகளுக்கான முன்னெடுத்து செல்லும் பட்ஜெட் என்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மத்திய பட்ஜெட்டை வரவேற்றுள்ளார். மேலும், மாநிலங்களுக்கிடையே எந்தவித பாகுபாட்டினையும் மத்திய பாஜக அரசு பார்ப்பதில்லை என்றும் அவர் கூறினார்.
மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மோடி 3வது முறையாக பதவியேற்றபின் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது என்பதால் எதிர்பார்ப்பு இருந்தது. இன்று காலை 11 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024- 25ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில், பீகார் மற்றும் ஆந்திராவுக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்தார்.

ஆந்திராவுக்கு ரூ. 15,000 கோடி சிறப்பு நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்தார். இதேபோன்று பீகாரில் சாலை மேம்பாட்டுக்கு ரூ26,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பீகாரில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும், ரூ11,500 கோடியில் பீகாரில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கை, வடக்கு, வடகிழக்கு மாநிலங்களில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்கீடு என்று அறிவிக்கப்பட்டது.
இதேபோன்று, 5 கோடி பழங்குடிகளுக்கான சிறப்பு திட்டம், கடன் உத்தரவாதத் திட்டத்துக்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு, முதலீட்டு செலவினங்களுக்கு ரூ. 11.11 லட்சம் கோடி ஒதுக்கீடு, சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்திலும் பீகாருக்கு நிதி ஒதுக்கீடு, பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 3 கோடி புதிய வீடுகள் கட்டப்படும், சிறு, குறு தொழில் நிறுவன மேம்பாட்டுக்கான திட்டங்கள் அறிவிப்பு, சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம், முத்ரா கடன் உதவி திட்டத்தின் உச்சவரம்பு ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும் போன்றவற்றை அறிவித்தார்.
குறிப்பாக சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமாரின் ஆந்திரா மற்றும் பீகாருக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதனை அறிவிக்கும்போதே நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி செய்தனர். மேலும் ஆட்சியை காப்பாற்றுவதற்கான பட்ஜெட் என்றும், நாற்காலிக்கான பட்ஜெட் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்தன.
இந்த நிலையில் மத்திய பட்ஜெட் ஒரு நல்ல பட்ஜெட் என்றும், நாட்டை அடுத்த 10 ஆண்டுகளுக்கான முன்னெடுத்து செல்லும் பட்ஜெட் என்றும் வரவேற்றுள்ளார். மேலும், மாநிலங்களுக்கிடையே எந்தவித பாகுபாட்டினையும் மத்திய பாஜக அரசு பார்ப்பதில்லை என்றும் அவர் கூறினார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தன்னுடைய பண்ணை வீட்டில் மாவட்ட செயலாளர் சையது கான் தலைமையில் தேனி மாவட்ட ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது ஓ பன்னீர் செல்வம் கூறியதாவது:- இது ஒரு நல்ல பட்ஜெட். 3 வது முறையாக பிரதமர் ஆகியுள்ள மோடி ஆட்சியின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட். இந்த பட்ஜெட் இந்தியாவை அடுத்த 10 ஆண்டுகளுக்கு முன்னெடுத்து செல்லும் பட்ஜெட்டாக உள்ளது. அடுத்து வரக்கூடிய 10 ஆண்டுகளில் அடைகின்ற இலக்கினை நாம் 5 ஆண்டுகளிலே அடைந்துவிடுவோம்.
இந்த பட்ஜெட்டை வரவேற்கிறேன். எனது வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார். அப்போது செய்தியாளர்கள் ஆந்திரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து இருப்பது பற்றி கேள்வி எழுப்பினர். இதற்கு ஓ பன்னீர் செல்வம் கூறுகையில், "சிறப்பு நிதி ஒதுக்கீடு என்பது காரணங்களில் அடிப்படையில் தான் ஒதுக்கப்படுகின்றது. இதில் கூட்டணி அரசியல் காரணம் கிடையாது" என்றார்.
இதேபோன்று பீகார் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.11,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஓ பன்னீர் செல்வம், "அங்கு பாதிப்புக்கு ஏற்ற அரசாணையின் படியே நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில், மத்திய பாஜக அரசு மாநிலங்களுக்கிடையே எந்தவித பாகுபாட்டினையும் பார்ப்பதில்லை" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications