வைகை ஆற்றில் பெருவெள்ளம்.. மதுரை தரைப்பாலங்கள் மூழ்கின.. பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தேனி: வைகை ஆற்றில் 12,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வருசநாடு கம்பம் போடி போடிமெட்டு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் வைகை அணையிலிருந்து ஏற்கனவே மதுரை திண்டுக்கல் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
தேனியில் உற்பத்தியாகும் வையை ஆறு ஐந்து மாவட்ட மக்களின் பாசன மற்றும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து ராமநாதபுரம் மாவட்டத்தில் வங்கக்கடலில் கலக்கிறது. இந்நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது.
கோவையில் வீட்டிலேயே பிரசவம்.. உயிரிழந்த குழந்தை.. தாய் மீது வழக்குப்பதிவு
வைகை ஆற்றில் வெள்ளம்
மூல வைகை ஆற்று நீரோடு திண்டுக்கல், தேனி, மதுரை, உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாகக் கிளை ஆற்று நீரும் சேர்வதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் மதுரை உட்பட 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோரிப்பாளையம்-செல்லூர் சாலையில் போக்குவரத்து துண்டிப்பால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
12 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
சுமார் 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரை புரண்டோடுகிறது. ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகரிப்பால் திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தரைப்பாலங்கள் மூழ்கின
ஏற்கனவே கடந்த ஒரு மாதமாக 3 தரைப்பாலங்கள் மற்றும் வைகை கரையோரம் உள்ள அணுகு சாலையின் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் வைகை ஆற்றை ஒட்டி அமைந்துள்ள மீனாட்சி அரசு கல்லூரி சாலையின் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வறண்ட வானிலையே நிலவும்
இந்நிலையில், இன்று தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என, மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை கனமழை கொட்டியது. குற்றாலம், புளியரை, மேக்கரை, உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு பெய்த கனமழையால், அங்கு குளிர்ச்சியான சூழல் நிலவியது என்பது குறிப்பிடத்தக்கது.