வீணா ஜார்ஜ்- கேரளா அமைச்சரவையில் முதல் முறையாக இடம் பெறும் பெண் பத்திரிகையாளர் - 2 முறை எம்.எல்.ஏ
திருவனந்தபுரம்: கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் அமைச்சரவையில் பெண் பத்திரிகையாளர் வீணா ஜார்ஜ் இடம்பெற்றுள்ளார். கேரளா அரசியல் வரலாற்றில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் முதல் முறையாக அமைச்சராகும் பெருமையை வீணா ஜார்ஜ் பெற்றுள்ளார்.
''தவறான தகவல் வேண்டாம்.. எங்கள் நாட்டில் புதிய திரிபு வைரஸ் பரவவில்லை''.. சிங்கப்பூர் விளக்கம்!
கேரளா சட்டசபை தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளன. தேர்தல் முடிவுகள் வெளியாகி 18 நாட்களுக்குப் பின்னர் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சரவை நாளை பதவியேற்க உள்ளது.
பினராயி அமைச்சரவையில் 3 பெண்கள்
பினராயி விஜயன் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 3 பெண்களில் ஒருவர் வீணா ஜார்ஜ். சிபிஎம் கட்சியின் பேராசிரியர் ஆ. பிந்து, சிபிஐ கட்சியின் சின்சு ராணி ஆகியோரும் பினராயி விஜயன் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பெண்கள்.
வீணா ஜார்ஜ்- இளம் வயது அரசியல்
அரசியல் பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் வீணா. இவரது தாயார் ரோசம்மா, நகராட்சி கவுன்சிலராகப் பணியாற்றியவர். மாணவர் பருவத்தில் சிபிஎம் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்.எப்.ஐ-ல் தீவிரமாக பணியாற்றினார்.
கல்லூரி பேராசிரியர்
இயற்பியல் பட்டதாரியான வீணா, பிஎட் படிப்பு முடித்ததும் பத்தினம்திட்டா கத்தோலிக்க கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர். இதனையடுத்து தீவிர அரசியலை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு பத்திரிகை துறைக்குள் நுழைந்தார் வீணா ஜார்ஜ். 2012 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கவரேஜ்-க்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 5 இந்திய பத்திரிகையாளர்களில் வீணா ஜார்ஜும் ஒருவர்.
டிவி பத்திரிகையாளர்
மலையாள டிவி சேனல்களில் செய்தி வாசிப்பாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், விவாதங்களின் நெறியாளர் என பன்முகத்தன்மையை வெளிப்படுத்தி கொண்டிருந்தார் வீணா ஜார்ஜ். பத்திரிகை துறை பணிகளுக்காக பல்வேறு சர்வதேச விருதுகளையும் வீணா ஜார்ஜ் வென்றிருக்கிறார்.
தேர்தல்களில் வெற்றி
பத்திரிகை துறையில் இருந்து கொண்டே மீண்டும் தேர்தல் அரசியலுக்குள் நுழைந்தார் வீணா ஜார்ஜ். கடந்த 2016-ம் ஆண்டு ஆரண்முல்லா சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட வீணா, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை 7,642 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2-வது முறையாக இந்த முறையும் ஆரண்முல்லா தொகுதியில் போட்டியிட்டு 19,003 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
வீணாவின் கணவர்
வீணாவின் கணவர் ஜார்ஜ், மேல்நிலைப் பள்ளிக்கூட ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். மலங்கரா ஆர்த்தோடகஸ் சிரியன் தேவாலயத்தின் செயலாளராகவும் ஜார்ஜ் பொறுப்பில் உள்ளார்.
மாஜி அமைச்சர் ஷைலஜா
பினராயி விஜயனின் கடந்த அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஷைலஜாவும் ஒரு ஆசிரியர்தான். நாட்டில் கேரளாவில்தான் முதன் முதலில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. கொரோனாவின் பிடியில் இருந்து கேரளாவை மீட்கும் பணியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஷைலஜாவின் பங்கு பெரும் பாராட்டைப் பெற்றது. சிபிஎம் கட்சி விதிகளின் படி 2-வது முறையாக ஷைலஜாவுக்கு அமைச்சர் பதவி மறுக்கப்பட்டது. ஆனால் இந்த முடிவை தாம் ஏற்பதாக கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார் ஷைலஜா என்பது குறிப்பிடத்தக்கது.