தேனியில் ரயில் வரும் நேரத்தில்.. தண்டவாளத்தில் பழுதான வாகனங்கள்.. கடைசி நிமிடத்தில் நடந்த ஆச்சரியம்
தேனி: மதுரை-போடிநாயக்கனூர் இடையே ரயில் பாதை அமைக்கப்பட்ட பின்னர் தினமும் பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் ஓடுகின்றன. தேனியில் ரயில் வரும் நேரத்தில் கேட்டை அடைத்து வைப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று ரயில் வரும் போது கேட் மூடப்பட்டது. ஆனால் தண்டவாளத்தை கடக்க முயன்ற வாகனங்கள் கேட்டில் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் பொதுமக்களின் துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மதுரை-போடிநாயக்கனூர் இடையே ரயில் பாதை அமைக்கப்பட்ட பின்னர் தினமும் பயணிகள் ரயில், காலையிலும் மாலையிலும் தேனியை கடந்து வந்து செல்கிறது. இதுதவிர சென்னை போடிநாயக்கனூர் இடையே வாரத்தில் மூன்று நாட்கள் அதிவிரைவு ரயில் இயக்கப்படுகிறது.. சரக்கு ரயில்கள் அடிக்கடி வந்து செல்கின்றன. இதுதவிர மின்மயமாக்கல் பணி காரணமாக தினமும் என்ஜின்கள் ஓட்டி பரிசோதிப்பதும் நடக்கிறது.

ரயில்கள் வரும் நேரங்களில் தேனி நகரில் மதுரை-பெரியகுளம் சாலையில் ரயில்வே கேட் உள்பட தேனியில் உள்ள மூன்று ரயில்வே கேட்டுகளும் அடைக்கப்படும். ரயில் சென்ற பிறகு கேட் திறக்கப்படும். மதுரை-பெரியகுளம் சாலையில் ரயில்வே கேட் மூடப்பட்டு திறக்கப்படும் போது, கடும் நெரிசல் ஏற்படும். போக்குவரத்து நெரிசல் சீராக ஒவ்வொரு முறையும் கணிசமான நேரமாகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள்.
இதனிடையே ரயில்வே கேட் மூடப்படும் நேரத்தில் வாகன ஓட்டிகள் விதிகளை மதிக்காமல், கேட் கம்பிகள் இறங்கும் இடைவெளியில் புகுந்து தண்டவாளத்தை கடந்து செல்ல முயற்சிப்பது அடிக்கடி நடக்கிறது. அப்படித்தான் தேனி-பெரியகுளம் சாலையில் நேற்று காலை 8.55 மணியளவில் சென்னையில் இருந்து போடி நோக்கி வரும் ரயிலுக்காக ரயில்வே கேட் மூடப்பட்டது.
அப்போது கேட் மூடும் நேரத்தில் தண்டவாளத்தை ஒரு ஆட்டோ, ஒரு மினிவேன் மற்றும் சில இருசக்கர வாகன ஓட்டிகள் அவசர, அவசரமாக கடக்க முயன்றார்கள் இதில், ஆட்டோவும், மினிவேனும் ஒருபுற கேட்டை கடந்து, அடுத்த கேட்டை கடக்கும் முன்பு அந்த கேட் பாதியளவு தரையிறங்கி விட்டது. இதனால், ஆட்டோ, மினிவேன் வெளியேற முடியாமல் தண்டவாள பகுதியில் சிக்கிக் கொண்டு நின்றது. ஆட்டோவில் பயணிகள் சிலர் இருந்தனர். மினிவேனில் பயணிகள் யாரும் இல்லை.
ஆட்டோ, மினிவேன் இரண்டையும் ஒரே நேரத்தில் பின்நோக்கி நகர்த்த முயன்றபோது இரு வாகனங்களும் ஒன்றோடு, ஒன்று உரசி தண்டவாளத்தில் நகர முடியாமல் சிக்கி அப்படியே நின்று கொண்டன. இதையடுத்து துரிதமாக செயல்பட்ட போலீசார் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் முழுமையாக மூடப்படாமல் இருந்த கேட்டின் வலதுபுறம் இருந்த இடைவெளி வழியாக மினிவேனை வெளியேற்றினர். ஆனால், ஆட்டோவை வெளியேற்ற முயன்ற போது, அது திடீரென்று பழுதாகி நின்றது. .
ரயில் வந்து கொண்டு இருக்கும் நேரத்தில் தண்டவாளத்தில் ஆட்டோ சிக்கிக் கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது. உடனே ஆட்டோவில் இருந்த பயணிகள் கீழே இறங்கி தண்டவாளத்தை கடந்து சென்றார்கள். அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் சிலர் மின்னல் வேகத்தில் ஓடி வந்து, ஆட்டோவை தள்ளிச் சென்று தண்டவாளத்தில் இருந்து நகர்த்தி, ரயில்வே கேட்டை கடந்து செல்ல உதவினார்கள். அடுத்த நிமிடமே தண்டவாளத்தை ரயில் வேகமாக கடந்து சென்றது. போலீசார் மற்றும் பொதுமக்கள் துரிதமாக செயல்பட்டதால் அங்கு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஆட்டோ மற்றும் வாகன ஓட்டிகள் தண்டாவளத்தில் கேட் மூடப்பட்டால் பொறுத்து செல்லுமாறு போலீசார் அறிவுரை வழங்கினார்கள். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications