என்னப்பா சொல்றீங்க.. ஆண்டிப்பட்டி போலீஸ் ஸ்டேசன் பக்கத்துலயேவா.. அதுவும் ஆடிட்டர் வீட்டிலா அப்படி?
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி காவல் நிலையம் அருகே வசிக்கும் ஆடிட்டர் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள், 20 பவுன் நகைகள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முக்கியமான நகரமாகும். ஆண்டிப்பட்டியை சுற்றி ஏராளமான கிராமங்கள் இருக்கின்றன. 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினமும் போக்குவரத்து, வணிகம், பள்ளி, கல்லூரிக்கு வந்து செல்லும் இடமாக இருக்கிறது. ஆண்டிப்பட்டி பேரூராட்சியாக இருந்த போதிலும் ஒரு நகராட்சிக்கு நிகராக மக்கள் வசிக்கிறார்கள்.

இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி காவல் நிலையத்துக்கு பின்புறத்தில் காமராஜர் தெரு இருக்கிறது. இங்குள்ள முதல் தெருவில் 58 வயதாகும் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆடிட்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
ஆடிட்டர் முருகேசன் கடந்த 20-ந்தேதி தனது மனைவியுடன் சென்னையில் வசிக்கிற மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்று இருக்கிறார். இந்தநிலையில் முருகேசன் மற்றும் அவரது மனைவி நேற்று காலை வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டு கதவுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டுள்ளார்கள்.
முருகேசன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகள், 100 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.32 ஆயிரம் ஆகியவை திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததை நோட்டமிட்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் ஆடிட்டர் முருகேசன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் தடய அறிவியல் நிபுணர்களும் அங்கு சென்று தடயங்களை பதிவு செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை கொள்ளையர்கள் தேடி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையம், அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களின் பின்புறத்தில் உள்ள காமராஜர் நகர் முதல் தெருவில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்மையில் தேனி பிசி பட்டி பகுதியில் தொடர் கொள்ளை நடந்து வந்தது. இதையடுத்து அந்த பகுதி மக்களே சிசிடிவி கேமராக்களை பொறுத்தினர். அந்த வகையில் ஆண்டிப்பட்டி உள்பட தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொறுத்தி கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications