தேனி அருகே பார்வர்டு பிளாக் கட்சி பிரமுகருக்கு நடுரோட்டில் நடந்த சம்பவம்.. கள்ளக்காதல் காரணமா?
தேனி: தேனி மாவட்டம் உத்தமபாளையம் பி.டி.ஆர். காலனியை சேர்ந்த பிரசாத் என்பவர் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் பிரமுகராக உள்ளார், இவர் அந்த பகுதியில் வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிக்கும் தொழில் செய்துவந்தார். இவருக்கும் அனீஸ்ரகுமான் என்பவரின் மனைவிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறையில் இருந்து வந்த அனீஸ்ரகுமான் என்ன செய்தார் என்று பார்ப்போம்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பி.டி.ஆர். காலனியை சேர்ந்த 33 வயதாகும் பிரசாத் என்பவர் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி பிரமுகராக உள்ளார். இவருக்கு கல்யாணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர். பிரசாத் அந்த பகுதியில் வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிக்கும் தொழில் செய்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் பிரசாத் வசித்து வரும் உத்தமபாளையம் பி.டி.ஆர். காலனியிலேயே குடும்பத்துடன் வசித்து வருபவர் அனீஸ்ரகுமான் (40). கூலித்தொழிலாளி ஆவார்.. அவருடைய மனைவி சித்தி ஜூனோதா (30). அனீஸ்ரகுமான் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதனால் கடந்த ஆறு மாதமாக சிறையில் இருந்து வந்துள்ளார் அனீஸ்ரகுமான்.
இதனிடைய கணவர் சிறைக்கு சென்றுவிட்ட நிலையில் சித்தி ஜூனோதா தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் அதே தெருவில் வசித்து வந்தத பிரசாத், சித்தி ஜூனோதாவை அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளார். இந்த சந்திப்பு நாளடைவில் அவர்களிடையே கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இருவரும் தனிமையில் சந்தித்து காதலை வளர்ந்து வந்தார்களாம்.
இதற்கிடையே அனீஸ்ரகுமான், ஆறு மாதத்திற்கு பிறகு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். அப்போது தனது மனைவிக்கும், பிரசாத்துக்கும் இடையே உள்ள கள்ளக்காதல் விவகாரத்தை அக்கம் பக்கத்தினர் கூறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் அனீஸ்ரகுமான் கண்டித்தாராம். இருப்பினும் அவர்களது கள்ளக்காதலை கைவிடவில்லையாம்.
இது தொடர்பாக பிரசாத்துக்கும், அனீஸ்ரகுமானுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு , ஒரு கட்டத்தில் முன்விரோதமாக மாறியதாம். இதையடுத்து பிரசாத்தை தீர்த்துக்கட்ட, அனீஸ்ரகுமான் முடிவு செய்தார். இதற்காக தனது நண்பர் ஒருவரின் உதவியை அனீஸ்ரகுமான் கோரினாராம். அவரும், பிரசாத்தை கொலை செய்ய ஒத்துழைப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து பிரசாத்தை, தனது நண்பருடன் சேர்ந்து அனீஸ்ரகுமான் கண்காணித்து வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று காலை வீட்டில் இருந்து பிரசாத், உத்தமபாளையம் கோர்ட்டு அருகே கம்பம் சாலையில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக மாலையுடன் தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுளளார். கோவில் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திய பிரசாத் உள்ளே செல்ல முயன்றுள்ளார். அப்போது தனக்கு எதிரே அனீஸ்ரகுமான், அவரது நண்பர் ஆகியோர் பட்டாக்கத்தி மற்றும் கத்தியுடன் பிரசாத்தை நோக்கி ஓடி வந்துள்ளனர். இதனைக்கண்ட பிரசாத் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து தப்பி ஓடினார். இருப்பினும் அவர்கள் 2 பேரும் பிரசாத்தை பின்தொடர்ந்து விரட்டினார்கள்.
சுமார் 300 மீட்டர் தூரம் ஓடிய பிரசாத் அங்கிருந்த தனியார் தங்கும் விடுதிக்குள் புகுந்துள்ளார். பிரசாத்தை பின்தொடர்ந்து அனீஸ்ரகுமான், அவரது நண்பரும் விடுதிக்குள் சென்றார்களாம். ஒரு கட்டத்தில் பிரசாத் அவர்களிடம் சிக்கி கொண்டார். இதனையடுத்து தாங்கள் வைத்திருந்த கத்திகளால் சரமாரியாக பிரசாத்தை வெட்டி கொன்றதாக கூறப்படுகிறது. இதில் பிரசாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவர் இறந்ததை உறுதி செய்த அனீஸ்ரகுமான் உள்பட 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்கள்.
இதுகுறித்து உத்தமபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் பிரசாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அனீஸ்ரகுமான் உள்பட 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடுரோட்டில் ஓட, ஓட விரட்டி பார்வர்டு பிளாக் கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications