ஆஹா இது லிஸ்ட்லயே இல்லையே.. பிரதமர் மோடியை வரவேற்று திமுகவின் தங்கம் போட்ட ட்வீட்டால் சர்ச்சை!
தேனி: பிரதமர் நரேந்திர மோடி அதானியுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் போட்டு திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்பி தங்க தமிழ்செல்வன் வரவேற்றதால் சர்ச்சை எழுந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று பகல் 1.35 மணிக்கு ஹைதராபாத்தின் பேகம்பேட் விமான நிலையத்தில் இருந்து விமானப் படையின் தனி விமானம் மூலம், சென்னை விமான நிலையத்துக்கு மதியம் 2.45 மணிக்கு வருகிறார். விமான நிலையத்தில் பிரதமரை, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர். பின்னர், சென்னை புதிய விமான நிலையத்துக்கு வரும் பிரதமர், புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை திறந்து வைத்து பார்வையிட உள்ளார்.
வந்தே பாரத் ரயில்

பின்னர் மாலை 3.25 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் நேப்பியர் பாலம் அருகே உள்ள ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்துக்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் சென்னை சென்ட்ரல் எம்ஜிஆர் ரயில் நிலையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார். சுமார் மாலை 4 மணி அளவில் சென்னை - கோவை இடையிலான 'வந்தே பாரத்' அதிவிரைவு ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளார்கள்.
ரயில்வே திட்டம்
அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் மாலை 6.30 மணிக்கு பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி காரில் செல்கிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில், தாம்பரம் - செங்கோட்டை இடையே வாரம் 3 முறை இயக்கப்படும் விரைவு ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். ரூ.294 கோடியில் திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி இடையே 37 கி.மீ. தொலைவுக்கு முடிக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையை தொடங்கி வைக்கிறார். ரூ.3,700 கோடி மதிப்பிலான சாலை திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சியிலும் முதல்வர் ஸ்டாலினும் பங்கேற்கிறார்.
முதுமலை பயணம்

அங்கிருந்து விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி இரவு 7.45 மணிக்கு தனி விமானம் மூலம் கர்நாடக மாநிலம் மைசூருவுக்கு புறப்பட்டு செல்கிறார். மைசூருவில் இன்று இரவு தங்கும் பிரதமர், நாளை சாலை மார்க்கமாக பந்திப்பூர் சரணாலயம், முதுமலை யானைகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு செல்கிறார். அங்கு புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50-ம் ஆண்டு விழா உட்பட பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். ஆஸ்கர் விருது பெற்ற 'தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப் படத்தின் நாயகர்களான பொம்மன் - பெள்ளியை சந்தித்து பாராட்டுவார் என்று கூறப்படுகிறது.
அதானியுடன் மோடி

இந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் பங்கேற்க இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று தேனி மாவட்ட திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் போட்ட ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் தனது ட்வீட் பதிவில், அதானியுடன் விமானத்தில் பிரதமர் நரேந்திர மோடி அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை போட்டு வரவேற்றதால் அது சர்ச்சையாகி உள்ளது. ஏன் இப்படி ஒரு படத்தை போட்டு வரவேற்றுள்ளார் என சிலர் ட்விட்டரில் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஏற்கனவே மோடிக்கு எதிராக கோ பேக் மோடி என்று காங்கிரஸ் கட்சியினர் தமிழகத்தில் ட்வீட் செய்து அதை டிரெண்டாக்கி வரும் நிலையில், தங்க தமிழ்செல்வன் போட்ட ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications