தேர்தலுக்காக கொரோனா எண்ணிக்கையில் குளறுபடியா? - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம்
சீர்காழி: தமிழகத்தில் தேர்தலுக்காக கொரோனா பாதிப்புகளைக் குறைத்துக் காட்டப்படவில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 7,524 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.தினசரி பாதிப்புகள் 10 ஆயிரத்திற்கும் கீழ் சென்றுள்ளது. இந்த நிலையில் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் குறைத்து கட்டப்படுவதாக சிலர் புகார் வைத்து வருகின்றன.

இந்த நிலையில் சீர்காழி அருகிலுள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. தடுப்பூசி முகாம் முறையாக நடக்கிறதா என தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது, '' தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. இவ்வாறு இறங்குமுகமாக இருக்கும்போது பொதுமக்கள் கவனத்துடன் இருக்கவேண்டும்.
இரண்டாவது அலையைவிட, மூன்றாவது அலையில் உயிர் இழப்பு மற்றும் பாதிப்பு விழுக்காடு அதிகளவு குறைவாக உள்ளதற்குத் தடுப்பூசி செலுத்திக்கொண்டதே காரணம். அதோடு தற்போது முகக் கவசம்,சமூக இடைவெளி போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்றத் தொடங்கிவிட்டனர்.
தமிழகத்தில் 1.34 லட்சம் படுக்கைகள் மருத்துவமனைகளில் தயாராக உள்ள நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்ட 4 சதவிகிதம் பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இனி வரும் காலங்களில் பொதுமுடக்க விலக்குகள் அதிகமாக இருக்கும், கட்டுபாடுகள் குறைக்கப்படும்'' என்றார்.
Recommended Video
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருப்பதால், கொரோனா பாதிப்பு குறைத்துக் காட்டப்படுகிறதா என்ற கேள்விக்கு, ''தமிழகம் முழுவதும் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. தேர்தலுக்காக தொற்று பாதிப்பு குறைத்து காட்டப்படவில்லை. மும்பை, தாராவி, டெல்லி, கேரளம் போன்ற பகுதிகளிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை நன்றாக குறைந்துள்ளது'' என்று சுகாதாரத்துறை செயலாளர் பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications