அடகு நகையை மீட்டு ஒப்படைக்காமல் ரூ.1 கோடி நகை மோசடி.. எஸ்ஐ கைது
அடகு வைத்த 246 பவுன் நகையை மீட்டு வியாபாரியிடம் ஒப்படைக்காமல் மோசடியில் ஈடுபட்டதாக தூத்துக்குடி எஸ்ஐ கைது செய்யப்பட்டார்.
நெல்லை: தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் கண்ணையா என்பவர் அடகு வைத்த 246 பவுன் நகையை மீட்டு வியாபாரியிடம் ஒப்படைக்காமல் மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார்.
நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த 46 வயதாகும் ரமேஷ் குமார் என்பவர் அப்பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
கடந்த 2020-ம் ஆண்டு சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள 246 பவுன் தங்க நகைகளை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்திருக்கிறார். கொரோனா பரவல் காரணமாக வியாபாரம் படுமோசமாக இருந்ததால் அடகு வைத்த நகைகளை மீட்க முடியாமல் சிரமப்பட்டார்.

ஒப்படைக்கவில்லை
இதையடுத்து ரமேஷ் குமார் கே.டி.சி.நகர் பாலீன் தோட்டம் பகுதியை சேர்ந்த கோமதிநாயகம் (41) என்பவரிடம் நகைகளை திருப்புவதற்கு பண உதவி செய்யுமாறு கேட்டிருக்கிறார். இதையடுத்து ரமேஷ் குமார் அடகு வைத்த நகைகளை கோமதிநாயகம் திருப்பினார். ஆனால் அந்த நகைகளை ரமேஷ் குமாரிடம் ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி வந்திருக்கிறார்.

பணம்
மேலும் ரமேஷ்குமார் நகைகளை தன்னிடம் ஒப்படைக்குமாறும், அதற்கான பணத்தை தந்துவிடுவதாகவும் கூறியிருக்கிறார் ஆனாலும் கோமதிநாயகம் நகைகளை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ரமேஷ்குமார் தொடர்ந்து நகைகளை திருப்பி தருமாறு கேட்டு வற்புறுத்தி வந்திருக்கிறார்,

திருப்பி கேட்கக்கூடாது
இதையடுத்து கோமதிநாயகம் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் தனது அண்ணன் கண்ணையாவிடம் இந்த பிரச்சினை குறித்து கூறினாராம். இதையடுத்து கண்ணையா, ரமேஷ்குமாரை அழைத்து நகைகளுக்காக ஏற்கனவே கொடுத்த பணத்தை வைத்துக் கொள்ள வேண்டும். நகைகளை திருப்பி கேட்கக்கூடாது என்று மிரட்டினாராம்.

எஸ்ஐ கைது
இதுகுறித்து ரமேஷ்குமார் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின்பேரில் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்கள். விசாரணைக்கு பின்னர் கோமதிநாயகம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணையா ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications