அருவியில் குளிக்க வந்தவர்கள் மீது.. லாரி மோதி.. உட்கார்ந்த நிலையிலேயே 2 பேர் பலி
நெல்லை அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்
நெல்லை: அருவியில் குளிப்பதற்காக காரில் வந்து கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஒன்று பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் உட்கார்ந்த நிலையிலேயே 2 மேனேஜர்கள் உயிரிழந்தது பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டையை சேர்ந்தவர் பாண்டீஸ்வரன். இவர் அங்கு வரும் பிரபல நிதி நிறுவனத்தின் மேனேஜர் ஆவார். இந்த நிறுவனத்தின் புதுக்கோட்டை, திருச்சி பகுதி மேனேஜர்கள், குற்றாலத்தில் சீசன் என்பதால் அங்கும், கேரளாவுக்கு சென்று அங்குள்ள அருவிகளில் குளிக்கலாம் என்றும் முடிவெடுத்தனர்.
அதன்படி, பாண்டீஸ்வரன், பொன் அமராவதி கிளை மேலாளர் ரமேஷ், புதுக்கோட்டை மண்டல மேலாளர் செந்தில்குமார், திருப்பத்தூர் மேலாளர் விஜயகுமார், ஆலங்குடி மேலாளர் காஜா மைதீன் ஆகியோர் சேர்ந்து ஒரே காரில் குற்றாலம் கிளம்பி வந்தனர்.

விபத்து
இன்று காலை திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் செங்கோட்டை அருகே உள்ள கட்டளை குடியிருப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கேரளாவில் இருந்து ஒரு லாரி எதிரே வேகமாக வந்து, எதிர்பாராதவிதமாக காரில் மோதியது.

3 பேர் படுகாயம்
காரின் முன் சீட்டில் உட்கார்ந்திருந்த பாண்டீஸ்வரன், ரமேஷ் இருவருமே சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்ற 3 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த புளியரை போலீஸார், அவர்களை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சடலங்கள்
முன் சீட்டில் உட்கார்ந்த நிலையிலேயே உடல் நசுங்கி உயிரிழந்த பாண்டீஸ்வரன், ரமேஷ் உடல்களை போலீசாரால் மீட்கவே முடியவில்லை. இதையடுத்து, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து காரை உடைத்து, 2 சடலங்களையும் வெளியே எடுத்தனர்.

தீவிர சிகிச்சை
இதில், செந்தில்குமார், விஜயகுமாருக்கு தென்காசி அரசு ஆஸ்பத்திரியிலும், காஜா மைதீனுக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியிலும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து சம்பந்தமாக விசாரணையும் நடந்து வருகிறது. அருவியில் குளிக்கலாம் என்று ஆசைப்பட்டு சென்றவர்களில் 2 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications