தண்ணீரின்றி கண்ணீருடன் காத்திருக்கும் 20,000 ஏக்கர் நிலங்கள்.. விடிவு என்றோ?
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் தென்காசி அருகே 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயி குடும்பத்தினர் தங்களது கோரிக்கை என்று நிறைவேறுமோ என்று வானம் பார்த்துக் காத்துக் கிடக்கின்றனர்.
நெல்லை மாவட்டம் தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊர் வாடியூர், மரியதாய்புரம், பரங்குன்றாபுரம், லட்சுமிபுரம், அச்சகுன்றம், கருவந்தா, கரையாளனுர், குறிஞ்சம்பட்டி, ரத்தமுடையார் குளம், சோலைச்சேரி, ஊத்துமலை, பூலாங்குறிச்சி, வென்றிலிங்காபுரம், காவலாக்குறிச்சி, ஏந்தலுர் ஆகிய ஊர்களில் சுமார் 3 ஆயிரம் விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த ஊரில் உள்ள அனைத்து மக்களுக்கும் பிரதான தொழில் விவசாயம் மட்டுமே. இந்தப் பகுதி அனைத்தும் வானம் பார்த்த பூமியாக உள்ளது. வடகிழக்கு பருவமழை பெய்தால் மட்டுமே இந்தப் பகுதிகள் அனைத்தும் விவசாயத்தால் செழிப்பது உண்மை.
ஆனால் இந்த பகுதியில் விவசாயத்தைத் தவிர மாற்று தொழில் எதுவும் கிடையாது. இந்த நிலையில் இந்தப்பகுதி விவசாயிகள் மழை பெய்தால் மட்டுமே விவசாயம். இல்லை என்றால் அண்டை மாநிலமான கேரளாவிற்கு கூலி வேலைக்கு செல்வது தவிர வேறு மார்க்கம் கிடையாது.
இரண்டு நீர்த்தேக்கங்கள்
வானம்பார்த்த பூமியாக இருக்கும் இந்த பகுதியில் இந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேக்கரையிலுள்ள அடவிநயினார் மற்றும் கடையநல்லூர் கருப்பாநதி ஆகிய இரண்டு நீர்த்தேக்கங்கள் மூலம் வெளியாகும் ஆற்று, கால்வாய் நீர்தான் கரைசேர்த்து வந்த நிலையில் அடவிநயினார் கரையில் அமைந்துள்ள 11ஆவது அணைக்கட்டில் இரட்டை குளம் அமைந்துள்ளது.
மக்களின் வாழ்வாதாரம்
இந்த இடத்திலிருந்து கால்வாய் அமைத்து மேற்கண்ட பகுதிகளில் உள்ள குளங்களுக்கு கால்வாய் அமைத்து கொடுத்தால் மறுபுறம் பரங்குன்றாபுரம், லட்சுமிபுரம், செங்குன்றம், கருவந்தா, உள்ளிட்ட பல்வேறு பகுதியில் ஊத்துமலை வரை சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நிலம் முழுமையாக நீர் பாசன வசதி பெறும். அதுமட்டுமின்றி மக்களின் வாழ்வாதாரமும் விவசாயம் செழிக்கும். இந்த பகுதியில் இருக்கும் ஓடையை அகலப்படுத்தி கால்வாயாக மாற்றி இருந்த குளத்தில் இருந்து தண்ணீர் கொண்டு செல்வதற்கு அரசு அதிகாரிகளின் நடவடிக்கைகள் இல்லாமல் போனதாலும், அவர்களின் அலட்சியத்தாலும் இன்று மேற்கண்ட கிராமங்கள் வானம் பார்த்த பூமியாக காட்சியளிக்கிறது.
கோரிக்கைகள் நிறைவேறவில்லை
மேலும் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வ மோகன்தாஸ் பாண்டியனிடம் அந்த பகுதி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் இதுவரை ஏறெடுத்து பார்க்கவில்லை என்றும், இந்த பகுதிகளை மேன்மைபடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த பகுதி மக்கள் தங்கள் பகுதியில் விவசாயம் மேம்பட நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர், தமிழக முதல்வர், உள்ளிட்ட அனைவருக்கும் மனு அனுப்பியும் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் வேதனை தெரிவிக்கின்றனர்.
அரசு செய்யுமா
ரெட்டை குளம் கண்மாயிலிருந்து ஊத்துமலை பெரியகுளம் வரை செல்லும் கால்வாயில் இருந்து இணைப்புகால்வாய் அமைத்துத் தர வேண்டி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்துமுடிவு செய்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பாராளுமன்றத்தேர்தல் நெருங்கும் வேளையில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து 20ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிகளை பெற நடவடிக்கைகளை எடுப்பது காலத்தின் கட்டாயம் ஆகும். தமிழக அரசு விவசாயத்தை மேம்படுத்துமா காத்திருந்து பார்ப்போம்.