அது எப்படி.. ஆண்கள் அணிக்கு 3 லட்சம், பெண்கள் அணிக்கு 2 லட்சமா? மேடையிலேயே ரூல்ஸை மாற்றிய கனிமொழி
திருநெல்வேலி: திசையன்விலையில் நடைபெற்ற அகில இந்திய கபடிப் போட்டியில் ஆண்கள் அணிக்கு அதிகமாகவும், பெண்கள் அணிக்கு குறைவாகவும் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதனையறிந்த எம்பி கனிமொழி ஆண்கள், பெண்கள் இரு அணிகளுக்கும் சமமான தொகை அளிக்க வேண்டும் என்று கூறியதையடுத்து இரு அணிகளுக்கும் சமமான பரிசுத் தொகை வழங்கப்படும் என மேடையிலேயே அறிவிக்கப்பட்டது.
ஆண்கள் அணிக்கு நிகராக பெண்கள் அணிக்கும் பரிசுத் தொகை உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டதால் வீராங்கனைகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையில் எம்பி கனிமொழியின் அறிவுறுத்தலின்பேரில் அகில இந்திய கபடிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் 30 ஆண்கள் அணியும், 30 பெண்கள் அணியும் கலந்துகொண்டனர். போட்டியில் வெற்றி பெறும் ஆண்கள் அணிக்கு 3 லட்சம் பரிசுத் தொகையும், பெண்கள் அணிக்கு 2 லட்சம் பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இப்போட்டியை திமுக எம்பி கனிமொழி டாஸ் போட்டு தொடங்கிவைத்தார். தொடர்ந்து அவர் மேடையில் பேசுகையில், இப்போட்டியில் எத்தனை அணிகள் கபடிப் போட்டியில் பங்கேற்கின்றனர் என்று கேட்டேன். அப்போது, 30 ஆண்கள் அணியும், 30 பெண்கள் அணிகளும் கலந்துகொண்டுள்ளனர் என்று கூறினார். மேலும், ஆண், பெண் சமத்துவத்தை கடைப்பிடிக்கிறோம் என்று தெரிவித்தனர்.
சரி.. ஆண்களுக்கு என்ன பரிசுத் தொகை, பெண்களுக்கு என்ன பரிசுத் தொகை என்று கேட்டேன். ஆண்கள் அணிக்கு 3 லட்சமும், பெண்கள் அணிக்கு 2 லட்சமும் அறிவித்திருப்பதாக கூறினர். இதிலிருந்து நாம் மாற வேண்டும். ஒரு விளையாட்டு வீரராக உள்ள ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி சமமான உழைப்பைத் தான் போடுகின்றனர். சரிதானே.. அதனை கண்டிப்பாக ஆண்களும் ஒப்புக் கொள்வார்கள்.
எனவே, அடுத்த ஆண்டு முதல் பெண்களை முன்னிலைப்படுத்தி பெண்கள் அணிகளுக்கும் சம அளவிலான பரிசுத் தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அப்போது, கபடிப் போட்டியின் ஒருங்கிணைப்பாளர் ஆண், பெண் இரு அணிகளுக்கும் இந்த ஆண்டே சமமான பரிசு வழங்கப்படும் என்று கூறியதையடுத்து, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பெண்கள் இந்த ஆண்டு முதலே சரியான முறையில் முன்னிலைப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் விளையாட்டு வீரர்களாக இருப்பது எளிதானது அல்ல. பெரும்பாலும் டாக்டராகவும், இன்ஜினியராக வேண்டும் என்றே நினைப்பார்கள். அப்போது, மேடையின் கீழ் இருந்தவர்கள் பெண்களுக்கு 3 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று கூறியதற்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications