பணப்பட்டுவாடா செய்த திமுக-வினர் 4 பேர் கைது.. ரெய்டு தொடர்கிறது
நெல்லை: நெல்லை அருகே காரில் வைத்து பண விநியோகம் செய்ததாக திமுகவை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் வாக்குக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனைதொடர்ந்து, தேர்தல் பறக்கும் படையினர், தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, தென் மாவட்டங்களில் மின்சாரத்தை துண்டித்து விட்டு, பணப்பட்டுவாடா நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், கருப்பந்துறையில் திமுக வேட்பாளர் ஞான திரவியத்தின் மகன் தினகரன் மற்றும் அவரது நண்பர் நவீன் ஆகியோரிடம் இருந்து ரூ.2.38 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் பறக்கும் படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக காஞ்சிபுரம் அமமுக ஒன்றிய செயலாளர் கூரம் பச்சையப்பனிடம் ரூ.16,800 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, எதிர்க்கட்சியினரை மட்டும் குறிவைத்து, சோதனை நடைபெற்று வருவதாக, புலம்பி வருகின்றனர்.
முன்னதாக,சாத்தூர் அருகே எதிர்க்கோட்டையில் அமமுக வேட்பாளர் எஸ்.ஜி.சுப்பிரமணியனின் தேர்தல் அலுவலகத்தில் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாலையில் அவரது தோட்டத்திலிருந்து ரூ.33 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், மகாதேவன் என்பவரை கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications