பாளையங்கோட்டை சிறையில்.. கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல்.. ஒருவர் உயிரிழப்பு
நெல்லை: பாளையங்கோட்டை சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் ஒருவர் பலியானார்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் முத்து மனோ என்பவர் உயிரிழந்தார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் வெடிகுண்டு மற்றும் அரிவாளுடன் சுற்றித் திரிந்ததற்காகக் கைது செய்யப்பட்டவர்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு வெடிகுண்டு உட்பட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்ததாக முத்து மனோ உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், அவர்கள் அனைவரும் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது சிறையில் திடீரென மோதல் ஏற்பட்டது. சிறையில் ஒரு பிரிவினர் அந்த நால்வரையும் சரமாரியாக தாக்கினர்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த முத்துமனோ நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஐசியுவில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த முத்து மனோ, சிகிச்சை பலனின்றி நேற்று மாலையில் உயிரிழந்தார். தாக்குதலில் காயமடைந்த மற்ற மூவரும் பாளையங்கோட்டை மத்தியச் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications