தொழிலாளர்கள் சம்பளம்.. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு அதிரடி அறிவிப்பு
திருநெல்வேலி: நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களிலும் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவில்லாமல் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் அந்த நிறுவனங்கள் மீது 1948-ம் ஆண்டு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு எச்சரித்துள்ளது. தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாகவே நிறுவனங்கள் குறைந்த பட்ச ஊதியத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். குறைந்த பட்ச ஊதியத்தை கடைபிடிக்காத நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுப்பது வழக்கம். அந்த வகையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் குறைந்த பட்ச ஊதியத்தை வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருவள்ளுவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில்: சென்னை தொழிலாளர் ஆணையர் ராமன் உத்தரவின்படி, 1948-ம் ஆண்டு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் கடந்த ஏப்ரல் மாதத்துக்கான திரவ பெட்ரோலிய எரிவாயு சிலிண்டர்களை வினியோகிக்கும் நிறுவனங்களில் குறைந்தபட்ச ஊதியம் வழங்குவது தொடர்பாக, நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஆட்சி எல்லைக்குட்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் சிறப்பாய்வு மேற்கொண்டனர்.
மொத்தம் 27 நிறுவனங்களில் சிறப்பாய்வு நடத்தியதில், அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவாக ஊதியம் வழங்கப்பட்ட நிறுவனங்கள் கண்டறியப்பட்டன.
அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச கூலிக்கும், நிர்வாகம் வழங்கிய சம்பளத்திற்கும் இடைப்பட்ட வித்தியாச தொகை சுமார் ரூ.3 லட்சத்து 84 ஆயிரத்து 988-ஐ சம்பந்தப்பட்ட 14 தொழிலாளர்களுக்கு பெற்று வழங்கக்கோரி நெல்லை தொழிலாளர் இணை ஆணையரிடம் 2 கேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளது.
நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களிலும் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவில்லாமல் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் அந்த நிறுவனங்கள் மீது 1948-ம் ஆண்டு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications