மகன் தனுஷ் உடல்நிலை குறித்த வதந்தி! நெப்போலியன் தரப்பு புகார்
நெல்லை: நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியனின் மகன் தனுஷின் உடல்நலம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி நெப்போலியனின் குடும்ப மருத்துவர் டேனியல் ராஜா, நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
நெல்லை எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்த டேனியல் ராஜா, நியூஸ் 18 தமிழ்நாடு சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நெப்போலியன் மகனின் உடல்நிலை குறித்து யூடியூப் சேனல்கள், மீடியாக்களில் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. உடல்நலனில் குறைபாடு இருக்கும் குழந்தையை பராமரிக்கும் தந்தைக்கு யாராவது போன் போட்டு நாங்கள் ஒரு செய்தியை பார்த்தோம்.

"உங்கள் பையனும் மருமகளும் ஒன்றாக இருக்கிறார்களா" என்றெல்லாம் கேட்டு வந்தால் அவரது மனம் என்ன பாடுபடும் என்பதை யாரும் உணர்வதில்லை. இதனால் நெப்போலியன் குடும்பத்தினருக்கு மனஉளைச்சல் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.
கடந்த இரு தினங்களாகவே இதுகுறித்த செய்தி வைரலாகி வருகிறது. இதனால் நாங்கள் கலந்தாலோசித்து எங்கள் மருத்துவமனை சார்பாக எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம்.
தசை சிதைவு உள்ள நோயாளிகள் தங்கள் வாழ்நாளை கூட்டிக் கொள்ளவும் நோயை சரி செய்து கொள்ளவும் நிறைய சிரமங்களை சந்திக்கிறார்கள். தன்னம்பிக்கையுடன் ஓரிண்டு பேர் வாழ்க்கையில் ஜெயித்து நிற்கிறார்கள்.
இது போன்ற போலியான தகவல்களால் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களை சோர்வடைய செய்யும். அவர்களது தன்னம்பிக்கையை குறைத்துவிடும். சிகிச்சை எடுக்கவும் யாரும் வரமாட்டார்கள். இது நெப்போலியன் என்ற தனிப்பட்ட நபருக்கான பிரச்சினை இல்லை. மாற்றுத்திறனாளிகளுக்கான பிரச்சினை!
நாங்கள் எங்கள் மனுவில் நெப்போலியன் மகன் மீது அவதூறு பரப்பும் செய்திகளை நீக்க வேண்டும். சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்களை முடக்க வேண்டும். அவதூறு பரப்பியவர்களை கைது செய்ய வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளோம்.
நெப்போலியன் குடும்பத்தினரின் மன உளைச்சலை அறிந்தே எங்கள் மருத்துவமனை மற்றும் அவரது குடும்பம் சார்பாக எஸ்.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளோம். இவ்வாறு மருத்துவர் டேனியல் ராஜா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications