“உல்டா”வான அண்ணாமலை புகார்.. பாஜக “மிஸ்டு கால்” உறுப்பினர் நாங்குநேரியில் கைதான மாணவனின் தந்தையாமே?
திருநெல்வேலி: நாங்குநேரியில் பட்டியலின மாணவன் தாக்கப்பட்டதன் பின்னணியில் திமுகவினர் இருப்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ள நிலையில், இதில் கைது செய்யப்பட்ட மாணவன் பாஜக உறுப்பினரின் மகன் என திமுக மாவட்ட தலைவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 12 ஆம் தேதி அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், "நாங்குநேரியில் பள்ளி மாணவர்களிடையே ஜாதியப் பிரச்சினைகள் காரணமாக, பன்னிரண்டாவது வகுப்பு படிக்கும் பட்டியல் சமூக மாணவர் சின்னதுரை மற்றும் அவரது சகோதரி இருவரும், சக பள்ளி மாணவர்களால் வெட்டப்பட்டுள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது. பள்ளி மாணவர்களிடையே ஜாதிய வேறுபாடுகள் அதிகரித்து வருவதும், ஆயுதங்கள் கொண்டு தாக்குவதும், எதிர்கால சமூகத்தை நினைத்து அச்சம் கொள்ள வைக்கிறது.

மாணவர் சின்னதுரை, நன்றாகப் படிக்கும் மாணவர் என்றும், ஆசிரியர்களிடம் நன்மதிப்பு பெற்றவர் என்றும் அறிகிறேன். சிறந்த மாணவராக வருங்காலத்தில், சமூகத்தில் உயர்ந்த பொறுப்பில் வரும் வாய்ப்புள்ள மாணவர் ஒருவர். ஜாதிய வன்முறையால் முடக்கப்படுவதை சிறிதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்தக் கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீதும், இதன் பின்னணியில் இருப்பவர்கள் அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன். அற்ப அரசியல் லாபங்களுக்காக வேறு வேறு சமூகங்களிடையே ஜாதி வெறியைத் தூண்டி, அதன் மூலம் ஆண்டாண்டு காலமாகப் பலனடைந்து வரும் கட்சி, திமுக என்பதை அனைவரும் அறிவர்.

இந்த சம்பவத்திலும், திமுக கட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்றும், அவர்கள் காவல்துறையை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளிவருகின்றன. உதட்டளவில் சமூகநீதி பேசி, தேர்தல் வாக்குகளுக்காக சமூகத்தில் ஜாதிய வேற்றுமையை வளர்த்துக் கொண்டிருக்கும் திமுகவின் செயல்பாடுகளின் விளைவுதான். இது போன்ற கொடூர சம்பவங்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்." என்று குறிப்பிட்டு இருந்தார்.
அதேபோல் பாஜகவினர் திமுக நிர்வாகியின் மகன் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில், திமுக நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், "நெல்லை மாவட்டம் நாங்குநேரி பள்ளி மாணவர்கள் மோதல் சம்பவத்திற்கு காரணமானவர்கள் திமுகவை சேர்ந்தவர்கள் என ஒரு பொய்யான குற்றச்சாட்டை மாநில பாஜ தலைவர் அண்ணாமலை வைத்துள்ளார்.
ஆனால் உண்மையில் காவல் துறையால் கைது செய்யப்பட்ட மாணவரின் தந்தை பாஜவின் தீவிர உறுப்பினராக இருந்து வருகிறார். மேலும் நாங்குநேரியில் வார்டு தலைவராகவும் பணியாற்றியுள்ளார். பாஜ முன்னணி தலைவரிடம் நெருங்கி பழகியும் உள்ளார். இது அந்த பகுதி மக்கள் அனைவருக்கும் தெரிந்தது.

ஆனால் இதையெல்லாம் மறைத்து விட்டு திமுகவிற்கும், திமுக நிர்வாகிகளின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற கெட்ட எண்ணத்திலும் ஒரு பொய்யான தகவலை அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். இதை மறைத்து அண்ணாமலை திமுக ஒன்றிய செயலாளர் மீது அவதூறு பரப்புவது அருவருக்கத்தக்க செயல் ஆகும்.
இதை நெல்லை கிழக்கு மாவட்ட திமுக வன் மையாக கண்டிக்கிறது. இனிமேல் இது போன்ற நேரங்களில் ஆதாரம் இல்லாத தகவல்களை வெளியிடுவது ஒரு கட்சி யின் தலைவருக்கு அழகு இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications