தமிழகத்தில் கலவரம் செய்தால்தான் பாஜக வளரும்.. இந்து மக்கள் கட்சி நிர்வாகி பேசிய ஆடியோவால் பரபரப்பு
நெல்லை: தமிழகத்தில் கலவரம் செய்தால்தான் பாஜக வளரும் என நெல்லை பாஜக மாவட்டத் தலைவரிடம் இந்து மக்கள் கட்சி மாநில துணைச் செயலாளர் பேசிய ஆடியோ லீக்காகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளில் 19 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டது. பாமக, அமமுக, தமாகா, புதிய நீதி கட்சி, தமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாஜக தேர்தலை சந்தித்தது.

ஆனால் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. புதுவையில் பாஜக கூட்டணி ஆட்சி என்கிற போதிலும் அங்கும் பாஜக வெல்லவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் கலவரம் செய்தால்தான் பாஜக வளரும் என இந்து மக்கள் கட்சி நிர்வாகி பேசிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த கட்சியின் மாநில துணைச் செயலாளர் உடையார் என்பவர் நெல்லை பாஜக மாவட்டத் தலைவர் தமிழ்ச் செல்வன் என்பவருக்கு போனில் பேசியுள்ளார். அதில் தமிழகத்தில் பாஜக எங்குமே வெல்லவில்லையே என இருவரும் கவலைத் தெரிவிக்கிறார்கள். இதைத் தொடர்ந்து நெல்லையில் நயினார் நாகேந்திரன் பணத்தையெல்லாம் கட்சியினரை நம்பி கொடுக்காமல் அவருடைய உறவினர்களை நம்பி கொடுத்துவிட்டார்.
ஆனால் அவர்கள் யாருமே வாக்காளர்களுக்கு பணத்தை விநியோகிக்கவில்லை. மேலும் கட்சியில் உள்ளடி வேலைகளை யாரோ பார்த்திருக்கிறார்கள். இதனால்தான் நெல்லையில் பாஜக தோற்றது என கூறியபடியே உடையார், தமிழகத்தில் பாஜகவால் ஓட்டை வாங்க முடியுமா, எவனையாவது அடிக்க தெம்பு திராணி இருக்கிறதா? கலவரம் செய்தால்தான் பாஜக தமிழகத்தில் கால் ஊன்ற முடியும்.
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக இருந்த சரத்குமாருக்கு பாஜகவில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பாஜக ஜாதி ரீதியிலான கட்சியாக மாறிவிட்டது. அண்ணாமலையின் வளர்ச்சி பிடிக்காமல் சிலர் சதி செய்துவிட்டனர். இதனால்தான் தமிழகத்தில் பாஜகவை வெற்றி பெற செய்யாமல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் இதற்கு முன்னால் இருந்த எந்த தலைவர்களும் எழுச்சிகரமான பணியை செய்யவில்லை. கட்சியினர் வேலை செய்தால், தமிழகத்தில் பாஜகவை வெற்ற பெற செய்திருப்பார்கள். இவ்வாறு உடையார் பேசியுள்ள ஆடியோ வைரலாகி வருகிறது.
தமிழகம் அமைதி பூங்காவாக இருப்பதாக தமிழக அரசு கூறி வரும் நிலையில் தமிழகத்தில் கலவரமும், வன்முறையும் அதிகரித்து வருவதாக பாஜக, இந்து அமைப்புகள் கூறி வரும் நிலையில் தற்போது இந்து மக்கள் கட்சி நிர்வாகியே கலவரம் வந்தால்தான் பாஜக வளரும் என கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications