சென்னை டூ நெல்லை.. ஓட்டுப்போட 700 கிமீ பைக்கில் குடும்பத்துடன் வந்த இயக்குனர்.. கனவிலும் நினைக்காதது
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்த ஜெயபாலன் என்பவர் சென்னையில் சினிமா இயக்குனராக இருக்கிறார். இவர் தற்போது பந்து என்ற படத்தை இயக்கி வருகிறார். இவர் ஏப்ரல் 23ம் தேதி ஓட்டுப்போட சொந்த ஊர் செல்ல முடிவு செய்தார். இதற்காக சென்னையில் இருந்து நெல்லைக்கு 700 கிமீ பைக்கிலேயே மனைவி குழந்தைகளுடன் வந்தார். ஆனால் நெல்லைக்கு வந்தவர் நாங்குநேரி அருகே சாலையில் ஓய்வெடுத்த போது யாருமே எதிர்பார்க்காத சம்பவம் நடந்துள்ளது.
ஓட்டுப்போட பலரும் கடந்த ஏப்ரல் 21 மற்றும் ஏப்ரல் 22ம் தேதிகளில் சென்னையில் இருந்து சொந்த ஊர் சென்றார்கள். சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல பலரும் தங்களது சொந்த வாகனங்களையே பயன்படுத்தினார்கள். ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் அதிகம்.. போதிய அளவில் அரசு பேருந்துகள் இல்லாதது போன்ற காரணங்களால் மக்கள் சொந்த வாகனங்களில் சென்றார்கள்.

அப்படித்தான் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மன்னார்புரத்தைச் சேர்ந்த 45 வயதாகும் ஜெயபாலன் என்ற சினிமா இயக்குநரும் திட்டமிட்டார். இவர் 'பந்து' என்ற படத்தை இயக்கி வந்தார். இவர் சட்டமன்ற தேர்தலையொட்டி சொந்த ஊருக்குச் சென்று வாக்களிக்கத் திட்டமிட்டார். ஆனால் பஸ்ஸில் டிக்கெட் கிடைக்கவில்லை. எனவே ஜெயபாலன் தனது மனைவி பேச்சியம்மாள் (35), 7 வயது மகனை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு சென்னையில் இருந்து புறப்பட்டார்.
மனைவியின் சொந்த ஊர் ராதாபுரம் அருகே உள்ள கஸ்தூரிரெங்கபுரம் ஆகும். எனவே மனைவியை அங்கு சென்று விட்டுவிட நினைத்தார். வரும் வழியில் சில இடங்களில் சற்று ஓய்வு எடுத்துக்கொண்டு சென்றார்கள்.
நேற்று முன்தினம் அதிகாலை(ஏப்ரல் 23) நாங்குநேரியை அடுத்துள்ள வாகைகுளம் ரோட்டில் வலதுபுறமாக மொபட்டை நிறுத்திவிட்டு 3 பேரும் அருகிலேயே நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் திடீரென சாலையோரம் நின்ற மொபட் மீதும், அருகில் நின்ற 3 பேர் மீதும் மோதியது. இதில் ஜெயபாலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பேச்சியம்மாள் மற்றும் அவரது மகன் பலத்த காயமடைந்தனர். உடனே அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலரும் சொந்த ஊருக்கு காரில் , பைக்கில் வந்துள்ளார்கள். அவர்கள் எல்லாரும், இன்றும் நாளை(ஞாயிறு), சென்னை கிளம்புவதற்கு வாய்ப்பு அதிகம். ஒருவேளை பைக்கில் செல்வதாக இருந்தால் மிககவனமாக செல்ல வேண்டும். முடிந்தவரை ஆம்னிபேருந்துகள் வருவதற்குள் சென்னையை நெருங்கிவிடுங்கள். அதற்கு ஏற்றார் போல் பயணத்தை திட்டமிடுங்கள்.












Click it and Unblock the Notifications