நெல்லை பள்ளி விபத்து: உயிரிழந்த மாணவர்கள் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் நிவாரணம்–முதல்வர் ஸ்டாலின்
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் பள்ளி கழிவறை இடிந்து விழுந்த விபத்தில் பலியான மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்த மாணவர்களுக்கு தலா ரூ.3 லட்சமும் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Recommended Video
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பொருட்காட்சி அருகே செயல்பட்டு வந்த டவுன் சாப்ட்டர் பள்ளியின் கழிவறை சுவர் இன்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இரு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த 6 மாணவர்கள் நெல்லை அரசு தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு,காயமடைந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
விபத்து குறித்து விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கப்படும் எனவும், இனி வருங்காலங்களின் விபத்துகள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுமென பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருந்தார். பலியான மாணவர்கள் மற்றும் காயமடைந்த மாணவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், நெல்லை மாவட்டம் பள்ளி கழிவறை இடிந்து விழுந்த விபத்தில் பலியான மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்த மாணவர்களுக்கு தலா ரூ.3 லட்சமும் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்தத் துயர சம்பவத்தை அறிந்த, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மிகவும் வேதனையுற்றதாகவும், உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications