அதிமுகவை ஆட்டி படைக்கிறது பாஜக.. அமித்ஷா கை காட்டும் நபருக்கே இரட்டை இலை.. எம்பி திருநாவுக்கரசர்
அதிமுகவை பாஜக ஆட்டி படைக்கிறது. 3 பிரிவுகளாக பிரிந்துள்ள அதிமுக ஒன்றிணையுமா என்பது சந்தேகம்தான்- காங்கிரஸ் எம்பி
நெல்லை: அதிமுக 3 பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறது. இதை ஒன்று சேர்க்கும் முயற்சியை பாஜக எடுத்துள்ளது. ஆனால் அவர்கள் ஒன்று சேர்வதாக இல்லை என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் உள்ள சவேரியார் கல்லூரி மாணவர் மன்ற நூற்றாண்டு விழாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான திருநாவுக்கரசர் கலந்து கொண்டார். அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறோம். ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் களமிறங்குகிறார்.

நிச்சயம்
அவர் நிச்சயம் மகத்தான வெற்றியை பெறுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கடந்த முறை 2021 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பெற்ற வாக்குகளை விட இந்த முறை இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வரலாற்றுச் சாதனை படைப்பார். வேட்புமனு தாக்கல் தொடங்குவதற்கு முன்பே அதிகார துஷ்பிரயோகம், பணப்பலம் என்று பாஜக கூறிவருகிறது.

படுதோல்வி
இது அவர்கள் படுதோல்வி அடைவோம் என்ற பயத்தில் புலம்ப தொடங்கிவிட்டார்கள். திமுக கூட்டணி கடந்த சட்டசபை , நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் மாபெரும் வெற்றியை பெற்றது. திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் முதல்வர் ஸ்டாலின் சிறந்த ஆட்சியை கொடுத்து வருகிறார். அதிமுக தற்போது மூன்று அணிகளாக பிரிந்து கிடக்கிறது.

இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்ற குழப்பத்தில் அதிமுக இருக்கிறது. அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக அக்கட்சிக்கு ஆதரவு கொடுக்குமா இல்லை தனித்து போட்டியிடுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. பாஜக தனது கைப்பாவையாகவே அதிமுகவை ஆட்டி படைக்கிறது.

பாஜக
அதிமுகவில் பிரிந்தவர்களை பாஜக ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் ஒன்றிணைவார்களா என தெரியவில்லை. அதிமுக கூட்டணியில் பிரிந்தவர்கள் வெகு தொலைவாக சென்றுவிட்டார்கள். அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பாஜக கொடுக்கலாம், இல்லாவிட்டால் கொடுக்காமலும் போகலாம்.

மோடி
சின்னத்தை பொருத்தமட்டில் மோடியோ அமித்ஷாவோ மேல் இடத்தில் உள்ளவரோ சொல்வது தான் நடக்கும். யார் எந்த சின்னத்தில் நிற்பார்கள் என்பதே தெரியவில்லை. தாமரை நின்றாலும் இரட்டை இலை நின்றாலும் ஈவிகேஎஸ் இளங்கோவன்தான் இந்த இடைத்தேர்தலில் வெல்வார். இவ்வாறு திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

அதிமுக வேட்பாளர்கள்
அதிமுக சார்பில் கேவி ராமலிங்கம், கே எஸ் தென்னரசு, நந்தகுமார் ஆகிய மூவரில் ஒருவரை வேட்பாளராக களமிறக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளது. பாஜக போட்டியிட்டால் ஆதரவு கொடுப்போம் என கூறிய ஓபிஎஸ், பாஜகவிடம் இருந்து எந்த பதிலும் வராததால் போட்டி வேட்பாளரை களமிறக்க முடிவு செய்துள்ளார். இதனிடையே இந்த தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்பதும் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications