நாங்குநேரியில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ்.. வாய்ப்பு தருமா திமுக..?
சென்னை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட விரும்புகிறதாம்.
தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. நாங்குனேரி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வசந்த்குமார் கடந்த மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரியில் போட்டியிட்டு எம்.பி.யாகிவிட்டார்.
இதனால் அவர் தனது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ராதாமணி, உடல்நலக் குறைவால் அண்மையில் காலமானார். இதையடுத்து அந்த 2 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
காங்கிரஸ் விருப்பம்
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நாங்குநேரி தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் இடைத்தேர்தலிலும் மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிட விரும்புகிறது காங்கிரஸ். இதற்காக திமுகவுக்கு தூது விடும் படலத்தை தொடங்கியுள்ளது தமிழக காங்கிரஸ் கமிட்டி முகாம். திமுக ஓ.கே.சொன்னால் குமரி அனந்தனை களத்தில் இறக்க முடிவு செய்திருக்கிறது காங்கிரஸ்.
திமுக யோசனை
இடைத்தேர்தலில் ஆளும்கட்சி விஸ்பரூப பலத்துடன் களத்தில் குதிக்கும் என்பதால் காங்கிரசுக்கு தொகுதியை கொடுத்து அது கோட்டை விட்டுவிடுமோ என திமுக தயக்கம் காட்டுகிறது. மேலும், திமுக சார்பில் பலமான வேட்பாளரை களமிறக்கினால் தான் வெற்றி உறுதி என திமுக நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நிலைமை இப்படியிருக்க களயதார்த்தை காங்கிரஸ் புரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறார் ஸ்டாலின்.
தமிழிசைக்கு செக்
குமரி அனந்தனை காங்கிரஸ் வேட்பாளராக களமிறக்கி தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு செக் வைக்கலாம் என புதுசா..புதுசா சத்தியமூர்த்தி பவனில் இருந்து அறிவாலயத்துக்கு ஐடியா கொடுக்கப்படுகிறது. ஆனாலும், குமரி அனந்தன் உடல்நிலை இருக்கும் நிலையில் அவர் தேர்தலில் போட்டியிடுவது எல்லாம் சாத்தியமா என்றும் காங்கிரஸ் வட்டாரத்திலேயே குரல் ஒலிக்கிறது.
பீட்டர் அல்போன்ஸ்க்கு வாய்ப்பு?
ஒரு வேளை காங்கிரஸ் தரபில் பீட்டர் அல்போன்ஸ் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டால் திமுக விட்டுக்கொடுக்கும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இது தொடர்பாக இதுவரை திமுக எந்த இறுதி முடிவையும் எடுக்கவில்லை.