நெல்லை அரசு மருத்துவமனையில் இந்து பெண்களுக்கு கருத்தடை சாதனமாம்.. கிளப்பிவிட்ட இந்து முன்னணி
திருநெல்வேலி: இந்து பெண்களுக்கு அவர்கள் சம்மதம் இன்றி கருத்தடை சாதனம் பொருத்தும் செயல் இந்துக்களின் மக்கள் தொகையை கருவறுக்கும் செயலாகும் என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த, இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் கைது செய்யப்பட்டது நெல்லையில் மிகப்பெரிய அதிர்வலையை உண்டுபண்ணிவிட்டது. என்ன நடந்தது?
திருநெல்வேலி டவுன் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகா.. இவருக்கு 31 வயதாகிறது. பிரசவத்திற்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. அங்கு கார்த்திகாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது..

பிறகு கடந்த டிசம்பர் 3ம் தேதி கார்த்திகா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனாலும் அவருக்கு தொடர் ரத்தப்போக்கு இருந்து வந்தது.. இதனால், வீட்டுக்கு அருகிலுள்ள கண்டியப்பேரி அரசு மருத்துவமனைக்கு சென்றார்.
ரத்தப்போக்கு: அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள், பிரசவத்தின்போது அரசு மருத்துவமனையில் கருத்தடை சாதனமான காப்பர்-டி முறையாக பொருத்தப்படாததால் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதாக கூறினார்கள். இதையடுத்து, கார்த்திகா, மறுபடியும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனிடையே இந்த விஷயத்தை இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் கையில் எடுத்தார்.. அனுமதியின்றி கார்த்திகாவுக்கு காப்பர்-டி பொருத்தப்பட்டது குறித்து மருது மற்றும் இந்து முன்னணி மாநில செயலர் குற்றாலநாதன் ஆகியோர் மருத்துவ பணிகள் இணை இயக்குநர் லதா உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் தந்தார்கள்..
கருவறுக்கும் செயல்: அத்துடன், குற்றாலநாதன் இதுகுறித்து வீடியோ ஒன்றையும் பதிவிட்டு கண்டித்திருந்தார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்.. இந்து பெண்களுக்கு அவர்கள் சம்மதம் இன்றி கருத்தடை சாதனம் பொருத்தும் செயல் இந்துக்களின் மக்கள் தொகையை கருவறுக்கும் செயலாகும்" என்று சர்ச்சைக்குரிய வகையில் குற்றாலநாதன் பதிவிட்டிருந்தார்.
இது தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் புகார், குற்றாலநாதன் மீது புகார் தரப்பட்டது.. அவதூறு பதிவிட்டதாக கூறி, மருத்துவமனை உறைவிட டாக்டர் கலாராணி மகாராஜநகர் போலீசில் இந்த புகாரை தந்திருந்தார. இதையடுத்து, இந்த புகாரின்பேரில் குற்றாலநாதன், மருது மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்றாலநாதனையும் கைது செய்து, ஸ்டேஷனுக்கு போலீசார் அழைத்து வந்தனர்.
குற்றாலநாதன்: அதற்குள் குற்றாலநாதன் கைது செய்யப்பட்ட சம்பவம் காட்டுத்தீயாய் அந்த பகுதிகளில் பரவியது.. அவரது கைதை கண்டித்து 15-க்கும் மேற்பட்டோர் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.. ஆனால், அவரகளை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, குற்றாலநாதன் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது நடுவர் சத்யா, கார்த்திகா புகாரில் டாக்டர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? மருத்துவமனை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியதுடன் குற்றாலநாதனை சிறையில் அடைக்க முடியாது என்றும் கூறி, குற்றாலநாதனை ஜாமீனில் விடுவித்தார்.
கடும் கண்டனம்: இதற்கு பிறகே கார்த்திகா மருத்துவமனை மீது புகார் தந்தார். பின்னர் மருத்துவமனை டீன், உறைவிட டாக்டர், டாக்டர்கள் மீது அனுமதியின்றி கருத்தடை சாதனம் பொருத்தியது குறித்து வழக்கு பதிவு செய்ய போலீசார் சிஎஸ்ஆர் மட்டும் வழங்கியதாக தெரிகிறது. இதைக்கேள்விப்பட்டு, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications