வேணாம் ராங்கு..இது வேற மாதிரி கேங்கு! போலீஸை தாக்கினால் துப்பாக்கியால் சுடுங்க! டிஜிபி போட்ட ஆர்டர்!
திருநெல்வேலி : குற்றவாளிகளை பிடிக்கச் செல்லும்போது போலீசார் மீது தாக்குதல் நடத்தினால் துப்பாக்கியை உபயோகப்படுத்தவும் தயங்க கூடாது எனவும், தமிழகத்தில் கூலிப்படை முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது என நெல்லையில் காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு பொறுப்பேற்றதில் இருந்தே அவர் தலைமையிலான போலீசார் தமிழகம் முழுவதும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளை பிடிக்கவும் கஞ்சா விற்பனை செய்போரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ரவுடிகளை பிடிக்கும் முயற்சியாக அக்டோபர் மாதத்தில் ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை, கஞ்சா விற்பனையை ஒழிக்கும் பொருட்டு ஆபரேஷன் கஞ்சா 2.0 உள்ளிட்ட ஆபரேஷன்கள் நடத்தப்பட்டன. இதனால் தமிழகத்தில் ரவுடிகள் நடமாட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது.
இனி இதெல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது.. போலீசாருக்கும் செக் வைத்த சைலேந்திரபாபு! ஹெல்மெட் கட்டாயம்
டிஜிபி சைலேந்திர பாபு
இந்நிலையில் குற்றவாளிகளை பிடிக்கச் செல்லும்போது போலீசார் மீது தாக்குதல் நடத்தினால் துப்பாக்கியை உபயோகப்படுத்தவும் தயங்க கூடாது என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். நெல்லை மாவட்ட காவல் ஆயுதப்படையில் நகர்ப்புற பகுதிகளுக்கான புதிய ரோந்து வாகன திட்டத்தையும் ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அறையையும் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து மாநகர் மற்றும் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் அலுவலகங்களை பார்வையிட்டார்.
ரோந்து பணி
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சைலேந்திரபாபு," தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் நகர்ப்புற பகுதிகளில் கூடுதல் ரோந்து பணி மேற்கொள்வதற்காக 400 ரோந்து வாகனங்கள் காவல்துறை செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி நெல்லை சரகம் மற்றும் நெல்லை மாநகர் பகுதிகளில் நகர்ப்புற பகுதிகளில் ரோந்து பணிகளை மேற்கொள்ள 69 ரோந்து வாகனங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் மூலம் செயின் பறிப்பு,பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றை தடுக்க மற்றும் கண்காணிக்க காவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்
கஞ்சா பறிமுதல்
இந்த ஆண்டு தமிழக முழுவதும் 23 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக முழுவதும் கஞ்சா விற்பனை தொடர்பாக 9,207 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12,635 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்களின் 4003 நபர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனை செய்ய பயன்படுத்தப்பட்ட 2384 சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நெல்லை சரக மற்றும் நெல்லை மாநகர் பகுதிகளில் மிகப்பெரிய அளவில் கஞ்சா விற்பனைக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கஞ்சா நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
குண்டர் தடுப்பு சட்டம்
தமிழகம் முழுவதும் 3967 ரவுடிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை சரக பகுதியில் ஜாதிய ரீதியிலான மோதல்கள் மற்றும் கொலைகளை தடுக்க மூன்று அடுக்கு கண்காணிப்பு திட்டத்தை தொடங்கியுள்ளோம். முதல் அடுக்கில் காவல் நிலைய அளவில் ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொள்வார்கள். இரண்டாம் அடுக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்லது மாநகர காவல் ஆணையாளர்கள் தலைமையிலான கண்காணிப்பு பணி நடைபெறு.ம் அதேபோல் மூன்றாவது அடுக்கில் சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து நேரடியாக கண்காணிப்பு பணி மேற்கொள்ள இந்த திட்டத்தின் மூலம் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூடு
தமிழகம் முழுவதும் குற்றவாளிகளை கைது செய்ய செல்லும் போது குற்றவாளிகளால் காவல்துறையினர் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குற்றவாளிகளை பிடிக்கச் செல்லும் செல்லும்போது போலீசாரை குற்றவாளிகள் தாக்கும் சூழல் ஏற்பட்டால் துப்பாக்கி சூடு நடத்தவும் தயங்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூலிப்படைக்கு எதிரான நடவடிக்கைகள் தமிழக முழுவதும் எடுக்கப்பட்டு சிறப்பு படை உருவாக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் கூலிப்படை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது" என்றார். இந்த நிகழ்ச்சியில் போது நெல்லை மாவட்ட காவல்காணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.