இதையா கொடுத்தாங்க? தாம்பூலப் பையை திறந்து பார்த்த உறவினர்கள் ஷாக்! திருநெல்வேலியில் அந்த சம்பவம்
திருநெல்வேலி: இப்போதெல்லாம், கல்யாணங்கள் என்றாலே ஆடம்பரமும், ஆரவாரமும் தான் நம் நினைவுக்கு வருகிறது.. ஆனால், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது.. இந்த சம்பவத்தை பற்றிதான் ஊரே பேச்சாக உள்ளது.. சமூகப் பொறுப்புணர்விற்குச் சான்றாக அமைந்துள்ள இந்த நிகழ்வு, ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அது என்ன தெரியுமா?
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. 100 சதவீத வாக்குப்பதிவு என்பது ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்நிறுத்தக்கூடிய கோரிக்கைதான்.

ஆனால், நம்முடைய இந்திய தேர்தல் வரலாற்றில் 100 சதவீத வாக்குப்பதிவு என்பது நீண்ட காலமாக கனவாகவே இருந்து வருகிறது. வேலைவாய்ப்பு மற்றும் கல்விக்காக மக்கள் இடம்பெயர்வது போன்ற காரணங்களால் முழுமையான வாக்குப்பதிவை எட்ட முடியாமல் தேர்தல் ஆணையம் திணறி வருகிறது.
திசையன்விளை திருமணம்
100% வாக்குப்பதிவு எட்டுவது உண்மையிலேயே கஷ்டம்தான்.. காரணம், எல்லா வாக்காளர்களும் ஒரே நாளில் வந்து வாக்களிக்க முடியாத சூழ்நிலை இருக்கும்.. சிலர் வேலை, உடல்நலம், பயணம், ஆர்வமின்மை போன்ற காரணங்களால் வர முடியாமல் போகும்.. மேலும் லிஸ்ட்டில் பெயர் பிழைகள், இடமாற்றம், விழிப்புணர்வு குறைவு போன்ற விஷயங்களும் பாதிக்கும்.. அதனால் முழு 100% வாக்குப்பதிவு நடைமுறையில் அடைய மிகவும் சிரமமாக இருக்கிறது..
இருந்தாலும் ஒவ்வொரு தேர்தலின் போதும் விழிப்புணர்வு மூலம் இந்த இலக்கை அடைய அதிகாரிகள் படுதீவிரமாக பணியாற்றி கொண்டிருக்கிறார்கள்.. அப்படித்தான் நெல்லை மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நூதன முயற்சிகளை எடுத்து வருகிறது.
மணமக்கள் சூப்பர் சம்பவம்
இந்த சூழலில் தான், திசையன்விளை பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தாமரைச்செல்வன் - செல்வப்பிரியா ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது. வழக்கமாக கல்யாணம் என்றால், தாம்பூல பையில் தேங்காய், பழம் மற்றும் மங்கலப் பொருட்கள் மட்டுமே இருக்கும். ஆனால், இந்த மணமக்கள் ஒரு படி மேலே சென்று, தாம்பூலப் பையையே ஒரு விழிப்புணர்வுச் சாதனமாக மாற்றினர்.
அவர்கள் வழங்கிய தாம்பூலப் பைகளில் "வாக்குரிமை நமது கடமை", "தேசத்தின் மாற்றத்தை விரல் நுனியில் எழுதுவோம்" மற்றும் "100% வாக்களிப்போம்" போன்ற வலிமையான வாசகங்களை அச்சிட்டு தந்தார்கள்.. அதுமட்டுமல்ல, வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் வாக்குப்பெட்டியின் படமும் அதில் இடம்பெற்றிருந்தது. திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களும் நண்பர்களும் இந்தப் பையைப் பார்த்தபோது நெகிழ்ச்சியடைந்தனர்.
திருநெல்வேலி திகைப்பு
கல்யாண மண்டபத்தின் உள்ளேயும், மணமக்கள் பிளக்ஸ் பேனர்களை ஆங்காங்கே வைத்திருந்தனர். அதில் "பணத்திற்கு வாக்கு அளிப்பதைத் தவிர்ப்போம்" மற்றும் "நேர்மையான முறையில் வாக்களிப்போம்" போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தது, காண்போரை வியப்படைய செய்தது.. ஊழலற்ற நேர்மையான தேர்தலை வலியுறுத்தி மணமக்கள் மேற்கொண்ட இந்த முயற்சி, ஒரு திருமண விழாவைத் தாண்டி சமூக மாற்றத்திற்கான மேடையாகவே மாறிவிட்டது எனலாம்.
திசையன்விளை மணமக்கள் இப்படி தங்களது வாழ்வின் முக்கிய நாளில், தேசப்பற்றை வெளிப்படுத்தியிருப்பது நெல்லை மாவட்ட இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தங்களது மகிழ்ச்சியான தருணத்திலும் சமூக நலனை முன்னிறுத்திய தாமரைச்செல்வன் - செல்வப்பிரியா இணையரை அப்பகுதி மக்கள் மனதார வாழ்த்தி சென்றார்கள்.. இப்போது இந்த செய்தி வைரலாகிவிடவும், இணையத்திலும் நெட்டிசன்கள் வாழ்த்தி கொண்டிருக்கிறார்கள்.. சூப்பர்ல..!!!












Click it and Unblock the Notifications