ஓசியில் சிகரெட் கேட்டதால் வந்த வினை! புதுமாப்பிள்ளைக்கு இப்படியா ஆகணும்! நெல்லை அருகே பாரில் கொடூரம்
தென்காசி: தென்காசி மாவட்டம் துப்பாக்குடியில் ஓசியில் சிகரெட் கேட்டதில் ஏற்பட்ட தகராறில் புதுமாப்பிள்ளை பீர் பாட்டிலால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக் பாரில் மது அருந்திக்கொண்டு இருந்த போது ஓசியில் சிகரெட் கேட்ட 2 பேரிடம் தர முடியாது என்று கூறிய புதுமாப்பிள்ளையை பீர் பாட்டிலால் தலையில் அடித்துள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே துப்பாக்குடி என்ற கிராமம் உள்ளது. இதில் ஊருக்கு வெளியே டாஸ்மாக் கடை உள்ளது. அதன் அருகே இருந்த பாரில் பிரம்மதேசத்தை சேர்ந்த வேல்முருகன், பட்டுசாமி, ராஜபாண்டி ஆகிய 3 பேர் மது வாங்கி குடித்துக்கொண்டிருந்தனர். இவர்கள் 3 பேரும் நண்பர்கள்.

ஓசியில் சிகரெட் கேட்டனர்
அப்போது அதே பாரில் பக்கத்து கிராமமான அடைச்சாணியை சேர்ந்த மாரிமுத்து (வயது 30) என்பவர் மது குடித்துக்கொண்டு இருந்துள்ளார். தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக இருந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண்டுகள் தான் ஆகிறது. அப்போது ராஜபாண்டி மாரிமுத்துவிடம் ஓசியில் சிகரெட் கேட்டு இருக்கிறார்.
அப்போது இவர் தன்னிடம் இல்லை என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து 3 பேரும் சேர்ந்து கேட்டு மிரட்டியிருக்கிறார்கள். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. உடனே மாரிமுத்து தன் சகோதரர் ஹரியிடம் போன் செய்து இது பற்றி கூறியிருக்கிறார். அருகில் உள்ள கிராமம் என்பதால் ஹரியும் உடனே அந்த டாஸ்மாக் பாருக்கு வந்திருக்கிறார். தொடர்ந்து அவர்கள் 3 பேரிடமும் தட்டிக் கேட்டுள்ளார்.
பீர் பாட்டிலால் தலையில் தாக்கினார்
இதனால் இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கினர். அப்போது வேல்முருகன் தரப்பை சேர்ந்த 3 பேரும் சேர்ந்து மாரிமுத்துவை அங்கு கிடந்த பீர் பாட்டிலை எடுத்து தாக்கியுள்ளனர். இதில் தலையில் பட்டதில் மாரிமுத்துவின் தலையில் இருந்து மளமளவென ரத்தம் கொட்டியது. சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். ஹரி தாக்கியதில் பட்டுசாமியும் படுகாயமடைந்தார்.
பெரிய சண்டையாக மாறியதும் அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு போன் செய்தனர். அதன்பேரில் ஆழ்வார்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய பட்டுசாமியை நெல்லை ஹைகிரவுண்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பொதுமக்கள் கோரிக்கை
தொடர்ந்து உயிரிழந்த மாரிமுத்துவின் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன்பின்னர் போலீசார் வேல்முருகன் மற்றும் ராஜபாண்டியை கைது செய்து அழைத்து சென்றனர். டாஸ்மாக் பாரில் வைத்து ஓசியில் சிகரெட் கேட்டதால் ஏற்பட்ட பிரச்சினையில் புதுமாப்பிள்ளை அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கஞ்சா, மது போன்ற போதையில் அடிக்கடி கொலை சம்பவங்கள் நடைபெறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறார்கள். போதை பொருள் புழக்கத்தை தடுக்க வேண்டும் என்றும் இளைஞர்கள் போதையின் பின்னால் செல்லாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அப்போது தான் இது போன்ற கொலை குற்றங்கள் குறையும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications