திமுக மாவட்ட கவுன்சிலர் செய்ற வேலையா இது? மதுபாட்டில் பதுக்கி விற்றதால் நெல்லையில் அதிரடி கைது
திருநெல்வேலி: திருநெல்வேலியில் வெளிமாநில மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த வழக்கில் திமுக மாவட்ட கவுன்சிலர் மகேஷ் குமார் உள்பட 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 1,200 மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திருநெல்வேலி டவுன் பகுதியை அடுத்த கண்டியப்பேரியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் மதுபானம் வீடுகளில் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன.

இந்த புகாரை தொடர்ந்து மதுவிலக்கு போலீசார் கண்டியப்பேரியில் சென்று ஒருவரின் வீட்டில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வீட்டில் சுமார் 1,000க்கும் அதிகமான மதுபான பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அங்கிருந்தவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் செண்பகம்பிள்ளை தெருவில் உள்ள சாலமன் தங்கராஜ் என்பவரின் வீட்டில் நுழைந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர். அங்கும் 100 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் அடிப்படையில் மொத்தம் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
செண்பகம்பிள்ளை தெருவை சேர்ந்த சாலமன் தங்கராஜ், களக்காடு பகுதியை சேர்ந்த ஜான்சன் தங்கராஜ், கங்கைகொண்டானை சேர்ந்த மகேஷ் குமார், சந்துரு மற்றும் மணிகண்டன் உள்ளிட்டவர்களை கைது செய்தனர். இதில் கைதான மகேஷ் குமாரின் திமுகவின் மாவட்ட கவுன்சிலராகவும், திட்டக்குழு உறுப்பினராகவும் உள்ளது தெரியவந்துள்ளது. இவர்கள் கோவா உள்பட பிற மாநிலங்களில் இருந்து மதுபான பாட்டில்கள் வாங்கி வந்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
இதுதவிர மேலும் 3 பேர் தலைமறைவாக உள்ளனர். இவர்களுக்கும் மதுபானம் கடத்தி பதுக்கி விற்றதில் தொடர்பு உள்ளதாகவும், அவர்களை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கைதானவர்களிடம் மொத்தம் 1,200 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இருசக்கர வாகனம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் மதுபான விற்பனைக்கு நான்கு சக்கர வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த வாகனம் இன்னும் பறிமுதல் செய்யப்படவில்லை. அந்த வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர். இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே தான் மதுபானம் கடத்தி விற்பனை செய்த வழக்கில் கைதான மாவட்ட கவுன்சிலர் மகேஷ் குமார் மீது திமுக கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications