உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்! நெல்லையப்பர் கோவிலில் தங்கத்தேர் இழுத்த திமுக எம்.எல்.ஏ. மற்றும் மேயர்!
நெல்லை: திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் திமுக எம்.எல்.ஏ. அப்துல் வஹாப் மற்றும் மேயர் சரவணன் ஆகியோர் தங்கத் தேர் இழுத்து வழிபட்டனர்.
உதயநிதி ஸ்டாலின் நீண்ட ஆயுளோடும் ஆரோக்யத்தோடும் வாழ வேண்டும் என நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் மனமுருகி வழிபாடு நடத்தினார்.
திமுக எம்.எல்.ஏ.வும், மேயரும் தங்கத் தேர் இழுத்த நிகழ்ச்சியில் நெல்லை மாநகர திமுகவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
உதயநிதி ஸ்டாலின்
திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு இன்று 45வது பிறந்தநாள் ஆகும். இதனை கோலாகலமாக கொண்டாடி வரும் திமுகவினர் பல்வேறு இடங்களில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகின்றனர். அதேபோல் ஒரு சில நிர்வாகிகள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் தங்கத் தேர் இழுத்து கவனம் ஈர்த்திருக்கிறார் நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன்.
பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
பாளையங்கோட்டை தொகுதி திமுக எம்.எல்.ஏ. அப்துல் வஹாப்பும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதனிடையே திமுக இளைஞரணியினர் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ரத்த தான முகாம், இலவச மருத்துவ முகாம், ஆதரவற்றோர் இல்லங்களில் அறுசுவை உணவு என பல்வேறு வகைகளில் உதயநிதி பிறந்தநாளை அவர்கள் கொண்டாடுகின்றனர். ஒரு சில இடங்களில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்களும் நடைபெறுகின்றன.
காலை 10 மணி முதல்
இதனிடையே இன்று காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை திமுக இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் திமுக நிர்வாகிகளை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுக் கொள்கிறார் உதயநிதி ஸ்டாலின். இதனால் தமிழகம் முழுவதும் இருந்தும் திமுக இளைஞரணி நிர்வாகிகள் சென்னையில் முகாமிட்டுள்ளனர். இதனிடையே அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
முக்கிய நிகழ்வு
உதயநிதி ஸ்டாலின் தனது 45 வது பிறந்தநாளான இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திட்டத்தை சென்னையில் தொடங்கி வைக்கிறார். சென்னை மாநகராட்சி 2.0 திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் கடலில் கால் வைத்து மகிழ்வதற்கு ஏதுவாக அமைக்கப்பட்ட பிரத்யேக நடை பாதையை தொடங்கி வைக்கவுள்ளார்.