ஏன் மீண்டும் அதிமுகவுக்கு வந்தேன் தெரியுமா? திமுகவில் என்ன நடந்தது? மனம் திறந்த வசந்தி முருகேசன்!
நெல்லை: தென்காசி தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தி முருகேசன் திமுகவில் சேர்ந்து 2 ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் அங்கிருந்து வெளியேறி மீண்டும் அதிமுகவில் இணைந்துவிட்டார்.
2 ஆண்டுகள் கூட திமுகவில் இருக்க முடியாத அளவுக்கு அப்படி என்ன நெருக்கடி ஏற்பட்டது என்பது பற்றி அறிய அவரிடம் பேசினோம். அப்போது அவர் கூறியதாவது;

''அம்மா தான் எனக்கு எம்.பி.சீட் கொடுத்து அரசியலில் முகவரி அளித்தார். ஏதோ ஒரு முடிவில் நான் திமுகவில் இணைந்தாலும் கூட, எனக்கு மன உறுத்தல் இருந்துக்கொண்டே இருந்தது. திமுகவில் இருந்த இரண்டு ஆண்டு காலமும் மன உறுத்தலோடு தான் இருந்து வந்தேன். மனமாற நான் திமுகவில் இருக்கவில்லை. இப்போது தான் மன நிம்மதியோடு இருக்கிறேன்.''
''எடப்பாடி பழனிசாமி அண்ணன் சந்தோஷமாக வரவேற்றார், மீண்டும் நல்ல முறையில் கட்சிபணியாற்றும் படி கேட்டுக்கொண்டார். நான் மீண்டும் எம்.பி. சீட் எதிர்பார்த்தோ, கட்சிப் பதவியை எதிர்பார்த்தோ அதிமுகவில் சேரவில்லை. மன பாரத்தை குறைக்கவே தாய் கழகத்தில் இணைந்தேன். திமுகவை பொறுத்தவரை எனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. திமுக தலைவர் ஸ்டாலினை பற்றி விமர்சிக்க ஒன்றுமில்லை.''
''திமுகவில் லோக்கலில் தான் கோஷ்டிப் பூசல் அதிகம் இருக்கிறது. இதனால் தான் இனியும் திமுகவில் பயணிக்க மனமின்றி அதிமுகவுக்கு திரும்பிவிட்டேன். இந்தச் சூழலில் மேற்கொண்டு திமுகவை பற்றி குறை சொன்னால் அது நல்லாயிருக்காது. இப்போது தான் அதிமுகவுக்கு வந்திருக்கிறேன். பிறகு பேசுகிறேன் விரிவாக.'' எனக் கூறினார் வசந்தி முருகேசன்.
வசந்தி முருகேசனை பொறுத்தவரை கடந்த 2014 முதல் 2019 வரை தென்காசி தொகுதி எம்.பியாக இருந்தவர். தென்காசியில் போட்டியிட்டாலும் இவர் வசிப்பது, அரசியல் செய்வது எல்லாமே நெல்லையில் தான்.












Click it and Unblock the Notifications