விஜய் அரசியலுக்கு வர பாஜக அழுத்தம் கொடுக்கிறதா? வந்து விழுந்த கேள்வி.. சீமான் கொடுத்த பதில் இதுதான்
நெல்லை: ரஜினி அரசியலுக்கு வராததால் விஜய் அரசியலுக்கு வர பாஜக அழுத்தம் கொடுப்பதாக சிலர் பேச்சுக்கள் அடிபடுவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு சீமான் அளித்த பதிலை பார்க்கலாம்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:- நாடாளுமன்ற தேர்தல் வரப்போகுது.. அடுத்து சட்டமன்ற தேர்தல் வரப்போகுது... ஏதாவது பார்த்து பண்ணி விடுங்க... என்றைக்கு உதயசூரியன்.. இரட்டை இலையை மறக்கிறார்களோ அன்று நாட்டு மக்கள் உருப்பட்டு விடுவார்கள்..

விவசாயி சின்னத்தை நினைக்கல.. உங்களை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. 8 கோடி மக்களுடன் கூட்டணி வைத்து இருக்கும் ஒரே கட்சி நாங்கள்தான். மாறி மாறி 50 வருஷமா திமுக, அதிமுகவிற்கு ஓட்டு போட்டு வீட்டீர்கள். ஒரு தடவை எனக்கு வாய்ப்பு கொடுங்கள். எனக்கு ஒரு 5 ஆண்டுகள் கொடுங்க போதும். அதுக்கப்புறம் நீங்கள் நினைப்பீர்கள். அப்பவே எனக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கலாம் என்று... அப்படிப்பட்ட ஒரு ஆட்சியை இந்த மண்ணில் நிறுவுவோம்" என்றார்.
தொடர்ந்து நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான் கூறியதாவது:- காசு வாங்கிவிட்டு ஓட்டு போடக்கூடாது என்று விஜய் கூறிய கருத்தை யாரும் மறுக்க முடியாது. நான் பல ஆண்டுகளாக பேசி வரும் கருத்தைத்தான் தம்பி விஜய் வலியுறுத்துகிறார். இதை நான் பிறப்பதற்கு முன்பே அம்பேத்கர் பேசியிருக்கிறார். சிலர் ரொட்டி துண்டுகளுக்காக மதிப்பு மிக்க நம் உரிமைகளை விற்பது என்பது அவமானகரமானது என்று சொல்லியிருக்கிறார்.
ஓட்டுக்கு காசு கொடுக்கிறவன் பாவி, காசு வாங்கி விட்டு ஓட்டு போடுகிறவன் தேசத்துரோகி என்று முத்துராமலிங்க தேவர் சொல்லியிருக்கிறார். தங்கத்தை யாராவது தவிட்டுக்கு விற்பானா? என்று அண்ணா சொல்லியிருக்கிறார். அவர் பிள்ளைகள் தான் தவிட்டுக்கு தங்கத்தை 50 ஆண்டுகளாக வாங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தான் முடிவு எடுக்க வேண்டும்.
வாக்குக்கு காசு கொடுக்கும் வேட்பாளருக்கு 10 ஆண்டு தடை என்று போட்டால் இது நின்று விடும். இரண்டு தேர்தலுக்கு தடை என்றல் காசு கொடுப்பது நின்று விடும். ஆனால் தேர்தல் ஆணையம் பறக்கும் படை என போட்டு மளிகை கடைக்கு போகிறவனையும் மருத்துவமனைக்கு செல்கிறவனின் பணத்தையும் பறித்துக் கொண்டு இருக்கிறது. அதிகப்படியாக காசு கொடுப்பதாக தேர்தலை நிறுத்தியிருக்கிறது தேர்தல் ஆணையம்..
ஆனால் வேட்பாளரை ஏன் கைது செய்யவில்லை. இல்லை அந்த வேட்பாளரை ஏன் தகுதி நீக்கம் செய்யவில்லை. தேர்தல் ஆணையம் நேர்மையாக நடக்க வேண்டும். அதை செய்யாத போது பேசி என்ன பிரயோஜனம் உள்ளது. இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகரகாவும் தமிழ்நாட்டின் முதன்மையான நடிகராகவும் விஜய் இருக்கிறார். 150 கோடி அவருக்கு சம்பளம்.. அதை பொருட்படுத்தாமல் வருகிறார் என்றால் வரவேற்க வேண்டியதுதான்.
தமிழர்களுக்கு கோடிக்கணக்கான பிரச்சினை உள்ளது. அதில் போராடுவதற்கு நிறைய கட்சிகள் தலைமகள் உள்ளது. இவ்வாறு சீமான் பேசினார். விஜய் அரசியலுக்கு வந்தால் என்னோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுப்பேனா என கேட்கிறீர்கள்.. எனக்கு யார் துணையும் தேவையில்லை. எங்களுடைய கோட்பாடு வேறு, கொள்கை வேறு, பாதை வேறு" என்றார்.
பாஜகதான் விஜய்க்கு அழுத்தம் கொடுத்ததா? என்று செய்தியாளர்கள் சீமானிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சீமான், அதில் உண்மையில்லை. விஜய் அப்பாவுக்கு ஆர்வம் இருந்தது. இது எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். மக்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்று விஜய் நினைக்கிறார். திரைத்துரையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துட்டார். அடுத்த பயணமாக அரசியலுக்கு போகலாம் என்று நினைக்கிறார். அதில் தவறு எதுவும் இல்லையே" என்று சீமான் பேசினார்.












Click it and Unblock the Notifications