எடப்பாடி பழனிசாமியின் குணமே துரோகம் செய்வதுதான்.. அப்பவும் இப்பவும் இதேதான்.. டிடிவி தினகரன் தாக்கு!
நெல்லை: துரோகம் செய்வது தான் எடப்பாடி பழனிசாமியின் இயற்கையான சுபாவம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
நெல்லையில் இன்று அமமுக கழக மகளிரணி துணைச் செயலாளர் சண்முககுமாரி இல்ல திருமண விழாவை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமை ஏற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், "மக்களவை தேர்தலுக்கான கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்போம். அப்போது யாருடன் கூட்டணி என்று தெரியவரும். கூட்டணி இல்லையென்றால் தேர்தலில் தனித்துப் போட்டியிடவும் தயாராக உள்ளோம. மக்களை ஏமாற்றுவதுதான் 3 ஆண்டுகால திமுக ஆட்சியின் செயல்பாடாக இருக்கிறது.
அமமுக, அதிமுகவுடன் இணைய வாய்ப்பே இல்லை. அதிமுகவில் இருக்கக்கூடிய ஸ்லீப்பர் செல்கள் உரிய நேரத்தில் வெளியே வருவார்கள். அதிமுக ஆட்சியைக் காப்பாற்றி கொடுத்த பாஜகவிற்கு இப்போது எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துள்ளார்.
பாஜகவுடன் இருந்து எல்லா பலனையும் அனுபவித்துவிட்டு தேர்தல் நேரத்தில் துரோகம் செய்துள்ளார். ஏற்கனவே, எடப்பாடி பழனிசாமி தன்னை முதல்வர் ஆக்கியவர்களுக்கு துரோகம் செய்தார். இப்போது, ஆட்சியை காப்பாற்றி கொடுத்த பாஜகவுக்கும் துரோகம் செய்துள்ளார். துரோகம் செய்வது தான் எடப்பாடி பழனிசாமியின் இயற்கையான சுபாவம்" என விமர்சித்தார்.
தொடர்ந்து, நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த டிடிவி தினகரன், "ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், ஆனால் ஏற்றுக்கொள்வது மக்களின் கையில் தான் உள்ளது" எனத் தெரிவித்தார்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளார். பாஜக மேலிடத்துடன் தினகரன் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதைத் தொடர்ந்து, பாஜக தமிழ்நாட்டில் அமைக்கப்போகும் புது கூட்டணியில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோர் இணைய உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications