திமுக மாவட்டச் செயலாளர் ரேஸில் மாஜி பெண் அமைச்சர்! ஸ்டாலின் முடிவு? அடுத்தது என்ன?
தென்காசி: தென்காசி மாவட்ட திமுக தற்போது தெற்கு, வடக்கு என இரண்டாக பிரிந்துள்ள நிலையில், மீண்டும் ஒருங்கிணைந்த தென்காசி மாவட்ட திமுகவாக மாற்றுவது குறித்து கட்சித் தலைமை ஆலோசித்து வருகிறதாம்.
ஒரு வேளை நிர்வாக வசதிக்காக தெற்கு, வடக்கு என இரண்டாகவே மாவட்டங்கள் தொடர்ந்தால் புதிதாக இருவர் பெயர்கள் மாவட்டச் செயலாளர் பதவிக்கு அடிகோடிடப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார் மற்றும் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா ஆகிய இருவரில் ஒருவர் தென்காசி தெற்கு திமுக மாவட்டச் செயலாளராக வர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தென்காசி மாவட்டம்
தென்றல் தவழும் குளு குளு தென்காசி மாவட்டத்திலிருந்து ஆவி பறக்க சுடச்சுட புகார் கடிதங்கள் கட்சித் தலைமைக்கு சென்றுகொண்டே இருக்கின்றன. தற்போது உட்கட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தென்காசி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட முக்கூடலில் நகரப்பொறுப்பாளர் லட்சுமணன் மீது புகார் எழுந்துள்ளது. பூக்கடை நடத்தி வரும் திமுக உறுப்பினரான அரிராம் என்பவர் நகரப் பொறுப்புக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் கேட்டிருக்கிறார். அதற்கு கால அவகாசம் முடிந்துவிட்டதால் விண்ணப்பம் தர இயலாது என மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன் தரப்பு தட்டிக்கழித்து அனுப்பிவிட்டதாம்.

பூ வியாபாரி
இதனால் பூக்கடை நடத்தி வரும் திமுகவின் அடிமட்ட தொண்டனான அரிராம் இது குறித்து புகார் வாசிக்கத் தொடங்கியுள்ளார். இதனிடையே ஏற்கனவே சுரண்டை, சங்கரன்கோவில் என பல பகுதிகளில் இருந்தும் தெற்கு மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன் மீது புகார்கள் சென்றிருப்பதால் இது தொடர்பான பஞ்சாயத்து ஒன்று அண்மையில் அன்பகம் கலை முன்னிலையில் அறிவாலயத்தில் நடைபெற்றது.

இருவர் பெயர்
இதனிடையே தொடர் சர்ச்சைகளை விரும்பாத திமுக தலைமை நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமாரை தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிப்பது குறித்து பரிசீலித்திருக்கிறதாம். இதேபோல் பாரம்பரிய திமுக குடும்பத்தை சேர்ந்தவரும் முன்னாள் அமைச்சருமான பூங்கோதை ஆலடி அருணா பெயரும் பரிசீலனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது திமுகவில் ஒரே ஒரு பெண் மட்டுமே மாவட்டச் செயலாளராக இருக்கிறார். (தூத்துக்குடி வடக்கு)

மாவட்டச் செயலாளர்கள்
கருணாநிதி காலத்தில் விஜயலட்சுமி பழனிசாமி, வாசுகி முருகேசன், அங்கையற்கன்னி என பலரும் மாவட்டச் செயலாளர் பதவியை திமுகவில் அலங்கரித்துள்ளார்கள். இதனால் பெண்கள் கோட்டாவில் பூங்கோதை ஆலடி அருணாவுக்கு ஜாக்பாட் அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே இது தொடர்பாக இன்னும் கட்சி மேலிடம் எந்த முடிவையும் இறுதி செய்யவில்லை என்பதும் கடைசிநேர திருப்பங்களும் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications