போலீசாருக்கு போக்கு காட்டும் போன்..நெல்லை ஜெயக்குமார் மரண வழக்கு! 80 அடி ஆழத்தில் முக்கிய தடயம்!
நெல்லை : மர்மமான முறையில் உயிரிழந்த நெல்லை மாவட்டம் காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் இல்லத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆறாவது நாளாக சோதனை நடத்தி வரும் நிலையில், அவரது செல்போன் கிணற்றில் இருக்கலாம் என தேடி வருகின்றனர்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அவரது உடல் எரிந்த நிலையில் உவரி அருகே கண்டெடுக்கப்பட்டது.

இதை அடுத்து அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜெயக்குமார் நெல்லையில் முக்கிய காங்கிரஸ் பிரமுகர் என்பதால் இது தமிழக அளவில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஜெயக்குமார் மரணம்: கொலை தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களிடம் விசாரணை நடந்த நிலையில், ஜெயக்குமாரின் மகன்களான ஜெஃப்ரின் மற்றும் மார்ட்டின் ஆகியோர் தற்போது போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். உயிரிழந்தது ஜெயக்குமார் தானா என்பதை உறுதி செய்ய அவரது மகன்களிடம் டிஎன்ஏ மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் பரிசோதனை முடிவுகள் வந்தவுடன் வழக்கின் அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தடயவியல் சோதனை: இந்நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த நெல்லை மாவட்டம் காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் இல்லத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆறாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். அவரது வீடு, தோட்டம் ஆகியவற்றில் ஏதாவது தடயங்கள் கிடைக்குமா? நிபுணர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பாக ஜெயக்குமாரின் செல்போனை கண்டுபிடிக்க சோதனையானது நடந்து வருகிறது. அது கிடைத்தால் தான் விசாரணையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்பதால் அதனை கண்டுபிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மாயமான செல்போன்: மயமாகியுள்ள செல்போன் வீடு தோட்டம் உள்ளிட்டவற்றில் கிடைக்காததால் அது ஜெயக்குமாரின் தோட்டத்து கிணற்றில் இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஜெயக்குமாரின் செல்போன் அவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் கிடக்கலாம் என தகவல் வெளியான நிலையில், அதிலுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 11 மணி நேரத்திற்கும் மேலாக கிணற்று நீரை வெளியேற்றி வரும் போலீசார், தீயணைப்புத் துறையினரின் உதவியையும் நாடியுள்ளனர்.
கிணற்றில் சோதனை: கிணற்றின் 4 பக்கங்களில் நீரூற்று இருப்பதால், தண்ணீரை எவ்வளவு வெளியேற்றினாலும் நீர்ப் பெருக்கின் அளவு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக தேடுதல் பணியானது தொய்வடைந்திருக்கும் நிலையில், கிணற்றில் உள்ள நீரை முழுமையாக வெளியேற்றிய பிறகே செல்போனை தேடும் பணி துவங்கும் என போலீசார் கூறியுள்ளனர். அதே நேரத்தில் கிணற்றில் செல்போனை தேடும் பணி நிச்சயம் தொடரும் எனவும், செல்போனை மீட்ட பிறகு அதிலுள்ள தடயங்கள், ஆதராங்கள், கால் ஹிஸ்டரி, புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை மீட்கும் பணி தொடங்கும் என போலீசார் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications