Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

30 கொலை..35 வருஷ பகை.. அசுபதி பண்ணையார் டூ தீபக் ராஜா! நெல்லையை திணற வைக்கும் படுகொலைகளின் பின்னணி!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல ரவுடியான தீபக் ராஜா காதலி கண் முன் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் இன்னும் பதட்டத்தில் இருக்கும் நிலையில் 35 ஆண்டு பகை காரணமாக தொடரும் கொலை சம்பவம் இது என்கின்றனர் நெல்லை பகுதிவாசிகள்..

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகைகுளத்தை சேர்ந்தவர் தீபக் ராஜா. இவர் கடந்த தனது காதலியுடன் பாளையங்கோட்டை அருகே கேடிசி நகரில் உள்ள பிரபல ஓட்டலில் உணவருந்த சென்றார்.

Pasupathi Pandian Crime

அப்போது அங்கு வந்த கும்பல் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாளால் ஹோட்டல் வாசலில் வைத்து தீபக் ராஜாவை, அவரது காதலி கண் முன்பே கழுத்து மற்றும் முகத்தில் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த தீபக் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவத்தால் நெல்லை, தூத்துக்குடியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஒரு வாரத்துக்கு பின் தீபர் ராஜாவின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிற்கு நான்கு மணி நேரம் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து 2000 போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இறுதி ஊர்வலத்தில் மட்டும் டிஐஜி, எஸ்பி உள்ளிட்ட காவல் உயர் அதிகாரிகளோடு 500 போலீசார் நடந்தே சென்றனர்.

தற்போதும் இரு மாவட்டங்களில் பதற்றம் நிலவும் நிலையில், இதற்கு விதையாக இருந்த சம்பவம் என்ன? 35 வருடங்களில் 35க்கும் மேற்பட்ட கொலைகள் நடக்க என்ன காரணம்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். தற்போது படுகொலை செய்யப்பட்டிருக்கும் தீபக் ராஜா தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவரான பசுபதி பாண்டியன் தீவிர ஆதரவாளர் என கூறப்படுகிறது. கடந்த 2012ஆம் ஆண்டு திண்டுக்கல் அருகேமாலை நேரத்தில் பசுபதி பாண்டியன் மர்மகும்பலால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தின் காரணமாக தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த கொலைக்கு முன்பும் பின்பும் பல கொலைகள் அரங்கேறி இருக்கிறது இதற்கெல்லாம் மூல காரணமாய் அமைந்தது 1990ஆம் ஆண்டில் மூலக்கரையில் நடந்த ஒரு சம்பவம் தான். அந்தப் பகுதியில் செல்வாக்கோடு வாழ்ந்து வந்த சிவசுப்பிரமணிய பண்ணையாருக்கும் அங்குள்ள உப்பளத்தில் பணியாற்றி வந்த புல்லாவெளி கிராம தொழிலாளர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.

இதையடுத்து இந்த பிரச்சினையை தொழிலாளர்கள் அவர்கள் சார்ந்த சமூகத்தின் தலைவராக இருந்து அமைப்பு ஒன்றை நடத்தி வந்த பசுபதி பாண்டியனிடம் கொண்டு சென்றனர். இந்த பிரச்சனை அடுத்து ஜாதி பிரச்சினையாக மாறி உள்ளது. பல தரப்பட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் முடிவு எட்டப்படாததால் பதற்றம் தொற்றிக் கொண்டது. இதனிடையே 1993ஆம் ஆண்டில் சிவசுப்பிரமணிய பண்ணையாரும் அவருடைய மகனான அசுபதி பண்ணையாரும் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். இந்த கொலை சம்பவத்தில் பசுபதி பாண்டியன், சிங்காரம், பாம் கர்ணன், பீர்முகமது உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுதான் இந்த விவகாரம் மேலும் தீவிரமடைய செய்ய காரணமாய் அமைந்தது. கொலை செய்யப்பட்ட அசுபதி பண்ணையாரின் மகன் சுபாஷ் பண்ணையாரும், நாராயணனின் மகனான் வெங்கடேச பண்ணையாரும் பசுபதி பாண்டியன் கும்பலை தொடர்ந்து குறி வைத்து தாக்குதல் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. வெங்கடேச பண்ணையார் பெரும் செல்வந்தர் என்பதோடு சமுதாய ரீதியான ஆதரவும் இருக்கிறது. அதையடுத்து பசுபதி பாண்டியன் ஆதரவாளர்களாக செயல்பட்டு வந்த பீர் முகமது, பாம் கண்ணன் உள்ளிட்டோர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வெங்கடேஷ் பண்ணையார் குடும்பத்தின் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 2003ஆம் ஆண்டில் அதிமுக தலைமையிலான அரசு இருந்தபோது வெங்கடேச பண்ணையார் காவல்துறை என்கவுண்டர்-ல் சுட்டுக் கொல்லப்பட்டார். இதை எடுத்து 2004 மக்களவைத் தேர்தலில் வெங்கடேச பண்ணையாரின் மனைவி ராதிகா செல்வி போட்டியிட்டு தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வென்றார்.

வெங்கடேச பண்ணையார் மறைவுக்குப் பிறகு அரசியலிலும் சமுதாய ரீதியிலும் சுபாஷ் பண்ணையார் தலைமை ஏற்றார். இந்நிலையில் 2006ஆம் ஆண்டு தூத்துக்குடிக்கு பசுபதி பாண்டியனும் அவரது மனைவி ஜெசிந்தா பாண்டியனும் காரில் சென்று கொண்டிருந்தபோது ஒரு கும்பல் அந்த காரை வழிமறித்து தாக்கியது. இந்த தாக்குதலில் பசுபதி பாண்டியன் உயிர்பிழைத்த நிலையில் அவரது மனைவி ஜெசிந்தா பாண்டியன் உயிரிழந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் சுபாஷ் பண்ணையார் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து திண்டுக்கல் சென்ற பசுபதி பாண்டியன் அங்கு உள்ள ஒரு தெருவில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் அதே தெருவை சேர்ந்த ஒரு பெண்ணின் உதவியோடு 2012 ஆம் ஆண்டில் திண்டுக்கல்லில் பசுபதி பாண்டியன் மாலை நேரத்தில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனால் தென் மாவட்டங்களில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்ட நிலையில் அதற்கு தொடர்ந்து பல கொலை சம்பவங்கள் அரங்கேறியது. 2016 ஆம் ஆண்டு சுபாஷ் பண்ணையார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் அவர் உயிர் பிழைத்தார். ஆனால் அவரது ஆதரவாளர்கள் கொலை செய்யப்பட்டனர். அவர்களது தலை பசுபதி பாண்டியனின் படத்துக்கு கீழே வீசிச் செல்லப்பட்டது.

இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது பசுபதி பாண்டியன் ஆதரவாளர்களான சிங்காரம், குமுளி ராஜ்குமார், கண்ணபிரான் மற்றும் தீபக் ராஜா ஆகியோர் என கூறப்படுகிறது. 2017 ஆம் ஆண்டில் சிங்காரம் மற்றொரு வழக்குக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது காவல்துறை கண்முன்னே கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சுபாஷ் பண்ணையாருக்கு தொடர்பு இருப்பதாகவும் வழக்கு இருக்கிறது.

இதற்கிடையே பசுபதி பாண்டியன் தரப்பில் இருந்த கண்ணபிரான், சுபாஷ் பண்ணையார் தரப்பில் இருந்த ராக்கெட் ராஜா ஆகியோருக்கு இடையே வார்த்தை போர் ஏற்பட்டு வீடியோக்கள் வழியே இருவரும் ஒருவரை ஒருவர் மோதிக்கொண்டனர். இந்த நிலையில் தான் பசுபதி பாண்டியனை கொலை செய்வதற்காக சுபாஷ் பண்ணையார் தரப்புக்கு உதவி செய்ததாக திண்டுக்கல்லைச் சேர்ந்த நிர்மலா என்ற மூதாட்டி கொலை செய்யப்பட்டார். அவரது தலையை துண்டித்த கொலையாளிகள் பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அருகே வீசி சென்றனர்.

இந்த கொலை மட்டுமல்லாது பசுபதி பாண்டியன் தரப்புக்கு உதவிய திண்டுக்கல்லை சேர்ந்த கவுன்சிலர் முத்துப்பாண்டி அழகர் கோயிலில் வெட்டி கொலை செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாகவே தற்போது மே 20ஆம் தேதி தீபக் ராஜா நெல்லையில் அவரது காதலி முன்னே வெட்டி கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் சுபாஷ் பண்ணையார் தரப்புக்கு இதில் தொடர்பிருக்குமா என்ற ரீதியிலும் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் தென் தமிழகத்தில் நடைபெற்ற பல ஜாதி ரீதியான கொலைகளில் தீபக் ராஜாவின் பெயரும் அடிபட்டு இருக்கிறது. மேலும் இரட்டை கொலை வழக்கு ஒன்றிலும் தீபக் ராஜா அரங்கேற்றி இருக்கிறார். அதன் காரணமாகவே இந்த கொலை நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த 35 ஆண்டு கால பகை காரணமாக நேரிடையாகவும், மறைமுகமாகவும் சுமார் 30 கொலைகள் அரங்கேறி இருக்கும் நிலையில், அதனை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+