குளு குளு குற்றாலத்தில் அனல் பறக்கும் அரசியல்! 2-வது முறையாக மறைமுகத் தேர்தல் ஒத்திவைப்பு!
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் 2-வது முறையாக இன்று மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Recommended Video
இதற்கு காரணம் திமுக சார்பில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் இந்த முறையும் தேர்தலை புறக்கணிக்கும் வகையில் பேரூராட்சி அலுவலகத்துக்கு வருகை தராததே ஆகும்.
இதனால் குளு குளு குற்றாலத்தில் அரசியல் களம் அனல் பறக்கிறது.

தென்காசி மாவட்டம்
தென்காசி மாவட்டத்தில் உள்ள தமிழகத்தின் பிரபல சுற்றுலா தலமான குற்றாலம் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 8 வார்டுகளில் திமுக 4, அதிமுக 4 என சம பலத்துடன் உள்ளது. கடந்த 4-ஆம் தேதி நடந்த தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலை திமுகவினர் புறக்கணித்ததால் அப்போது தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

மீண்டும் ஒத்திவைப்பு
இந்நிலையில் இன்று குற்றாலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. பேரூராட்சி கூட்ட அரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜமனோகர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், துணை ஆட்சியருமான ஷீலா ஆகியோர் தேர்தலை நடத்த 9.30 மணி முதல் காத்திருந்தனர். அதிமுக உறுப்பினர்கள் 4 பேரும் தேர்தல் நடைபெறும் கூட்ட அரங்கிற்கு வந்து இருந்தனர்.

திமுக உறுப்பினர்கள்
ஆனால் திமுக உறுப்பினர்கள் இம்முறையும் புறக்கணிப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து தேர்தலை ஒத்தி வைப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து குற்றாலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் 2-வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தோல்வி பயத்தின் காரணமாக திமுக உறுப்பினர்கள் தேர்தலை புறக்கணித்துள்ளதாக அதிமுக கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஆளுங்கட்சி
ஆளுங்கட்சியாக இருந்து கொண்டு திமுக கவுன்சிலர்கள் மறைமுகத் தேர்தலை எதிர்கொள்ள அஞ்சி இரண்டு முறை தேர்தலை புறக்கணித்திருப்பது அரசியல் ரீதியாக முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. வெற்றி, தோல்வியை மட்டும் பார்க்காமல் வளர்ச்சிப் பணிகளை கருத்தில் கொண்டு விரைவில் குற்றாலம் பேரூராட்சியில் யாரேனும் ஒருவரை தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications