இருட்டுக் கடை யாருக்கு? நயன் சிங்கை லெப்ட் ரைட் வாங்கிய கவிதா சிங்! பொது அறிவிப்பால் பரபரப்பு
நெல்லை: இருட்டுக் கடைக்கும் நயன்சிங்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் போலி உயிலை வைத்துக் கொண்டு இருட்டுக் கடையை அபகரிக்க முயற்சிக்கிறார் என்று கவிதா சிங் பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தரப்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நயன்சிங், போலியான உயிலை வைத்துக் கொண்டு இருட்டுக்கடையை அபகரிக்க முயற்சி செய்கிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் கவிதா சிங் இருட்டுக் கடையை நிர்வகித்து வருகிறார்.
சுலோச்சனா பாய் உயிரோடு இருக்கும் வரை நயன்சிங் எந்த சொத்துக்களுக்கும் உரிமை கோரியது இல்லை. 2020 ஆம் ஆண்டு அவர் உயிரிழந்த பிறகு சொத்துக்கள் பிரிக்கப்படாமல் உள்ளன என பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
திருநெல்வேலி அல்வா
திருநெல்வேலி அல்வா என்றாலே இருட்டுக் கடைதான் பலருக்கும் நினைவுக்கு வரும். இதன் உரிமையாளர் கவிதா சிங். இவருடைய மகள் கனிஷ்கா. இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் கோவையைச் சேர்ந்த பலராம் சிங் எனும் தொழிலதிபருடன் திருமணம் நடந்தது.
40 நாட்களில் வரதட்சணை புகார்
இவர்களுக்கு திருமணமான 40 நாட்களிலேயே இருட்டுக் கடையை எழுதி வாங்கி வருமாறு கனிஷ்காவுக்கு பல்ராம், அவரது தந்தை ஆகியோர் தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. மேலும் வரதட்சணையும் கூடுதலாக கேட்டதாக சொல்லப்படுகிறது.
மருமகன் குடும்பம்
இருட்டுக் கடையை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் இந்த விவகாரத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று மருமகன் குடும்பத்தினர் மிரட்டியதாக நெல்லை கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான புகாரை அளித்துள்ளார்.
பலராம் சிங் மறுப்பு
இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டை பலராம்சிங் தரப்பினர் மறுத்தனர். மேலும் தாங்கள் வரதட்சணையே வாங்காமல் திருமணம் செய்ததாகவும் இருட்டுக் கடையானது திருமணத்திற்கு பிறகுதான் கவிதா சிங்கின் கைக்கு வந்தது என்றும் நாங்கள் கடையின் உரிமையை கேட்டதாக சொல்லப்படுவதெல்லாம் பொய் என பலராம்சிங் செய்தியாளர்கள் சந்திப்பில் மறுத்திருந்தார்.
கனிஷ்காவின் புகார்
இதைத் தொடர்ந்து கனிஷ்காவின் புகாரின் பேரில் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பல்ராம் சிங் ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகாமல், 10 நாட்கள் கால அவகாசத்தை தங்களது வழக்கறிஞர் மூலம் கேட்டுள்ளார்.
இருட்டுக் கடை பிரச்சினை
இப்படி இருட்டுக் கடை குறித்து பிரச்சினைகள் எழுந்த நிலையில் இந்த கடை தனக்குதான் சொந்தம் என கவிதா சிங்கின் அண்ணன் நயன் சிங் அறிவித்துள்ளார். இதுகுறித்து சட்ட ரீதியாக போராடினால் எனக்கு உரிய தீர்வு கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
பிஜிலி சிங்
இதுகுறித்து அவர் பொது அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இருட்டுக் கடையை உருவாக்கிய கிருஷ்ண சிங் மறைவுக்கு பிறகு அவரது மகன் பிஜிலி சிங் இருட்டுக் கடையை நடத்தி வந்தார். அவரது மறைவுக்கு பிறகு, அவரது மனைவி சுலோச்சனா பாய்க்கு கடையின் உரிமை சேர வேண்டும் என 1999ஆம் ஆண்டு சட்டப்படி உயில் எழுதி வைத்துள்ளார் பிஜிலி சிங்.
ஜெய்ராம் சிங்
இந்த நிலையில் பிஜிலி சிங் மனைவி சுலோச்சன பாய் மறைவுக்கு பிறகு நேரடி வாரிசு இல்லாததால் அவருடைய சகோதரர் ஜெய்ராம் சிங்கிற்கு சேர வேண்டும் என உயில் எழுதி வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே உயிலின் படி ஜெயராம் சிங்கின் மகன் நயன் சிங்கிற்கு மட்டும்தான் இருட்டுக் கடை சொந்தம் என்றும் இதுகுறித்து நெல்லை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications