ஜெயக்குமார் தனசிங் துன்புறுத்தி கொலை? இறந்து 4 மணி நேரம் கழித்து உடல் எரிப்பு! பகீர் தகவல்
நெல்லை: நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் இறப்பதற்கு முன்பு பல மணி நேரமாக அடித்து துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.
நெல்லை காங்கிரஸ் தலைவர் கே.வி.கே.ஜெயக்குமார் கடந்த மே 2 ஆம் தேதி திசையன்விளையில் ஒரு கடையில் டார்ச் லைட் வாங்கி சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அந்த சிசிடிவியில் ஜெயக்குமார் ஒரு கடையில் ஏதோ பொருட்களை வாங்க வந்துள்ளார். அவர் வியர்வையை தன்னிடம் இருந்த கைக்குட்டையால் துடைக்கிறார். இதைத் தொடர்ந்து அவர் பில்லிங் கவுன்ட்டரில் ஒரு சிவப்பு நிற டார்ச்லைட்டை வாங்கி அதை கடைக்காரர் பேட்டரி போட்டு எரிய வைத்து காட்டுகிறார். இப்படியாக இந்த சிசிடிவி காட்சிகள் உள்ளன.
ஜெயக்குமார் பாதி எரிந்த நிலையில் சடலமாக கிடந்த தோட்டத்தில் இந்த டார்ச் லைட்டை காணவில்லை, ஒரு வேளை அதுவும் நெருப்பில் எரிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கெனவே ஜெயக்குமார் பயன்படுத்திய இரு செல்போன்களையும் காணவில்லை. இதை போலீஸார் தேடி வருகிறார்கள்.
ஜெயக்குமார் தனசிங் கடந்த மே 2 ஆம் தேதி முதல் காணவில்லை என அவருடைய மகன் போலீஸில் புகார் கொடுத்திருந்தார். இந்த நிலையில்தான் பாதி எரிந்த நிலையிலான உடல், அவருக்கு சொந்தமான தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயக்குமார் ஏதோ ஒரு கடிதத்தை எழுதியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
ஒரு சில கடிதங்கள் தங்களுக்கு வரவில்லை என நெல்லை மாவட்ட காவல் துறை மறுத்துள்ளது. இந்த மர்ம மரணம் தொடர்பாக 7 தனிப்படைகளை அமைத்து எஸ்.பி.சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார். ஜெயக்குமார் இறப்பதற்கு முன்பு அவருடன் யாரெல்லாம் தொடர்பு கொண்டார்கள் என்பது குறித்தெல்லாம் தனிப்படையினர் விசாரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஜெயக்குமாரின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது. அவரது வயிற்றுக்கு மேல் இரும்பு தகடு இருந்தது கண்டெடுக்கப்பட்டது. மேலும் அவரது கை,கால்கள் மின் வயரால் கட்டப்பட்டிருந்தன. இந்த நிலையில்தான் ஜெயக்குமார் கடையில் டார்ச் லைட் வாங்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த நிலையில் முற்றிலும் எரிந்த நிலையில் டார்ச் லைட்டும் அவருடைய தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டது. அது தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதைத்தான் ஜெயக்குமார் தனசிங் கடந்த மே 2 ஆம் தேதி வாங்கினாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த நிலையில் பிரேத பரிசோதனையின் முடிவுகளில் ஒரு பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் அவை சென்னைக்கு நிபுணர்களின் ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. அந்த ஆய்வு முடிவுகளில் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
ஜெயக்குமார் தனசிங் இறந்து 4 மணி நேரம் கழித்தே அவர் எரிக்கப்பட்டார். அவருடைய உடலில் கடப்பா கல், இரும்பு தகடு உள்ளிட்டவை கட்டப்பட்டிருந்தன. எனவே அவரை 5 மணி நேரமாக அடித்து துன்புறுத்தப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. அவரை துன்புறுத்தியதில் அவரே இறந்தாரா, இல்லை அவரை துன்புறுத்திவிட்டு மர்ம நபர்கள் கொலை செய்தனரா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications