எரிந்த நிலையில் கிடந்தது ஜெயக்குமார் தானா? உறுதி செய்ய எலும்புகள் டி.என்.ஏ சோதனைக்கு அனுப்பி வைப்பு!
நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் எரிந்த நிலையில் கிடந்த நிலையில், எலும்புகள் டிஎன்ஏ பரிசோதனைக்காக தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்துபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார். திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த இவர், கடந்த மே 4ஆம் தேதி அவரது தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்தார். ஜெயக்குமார் தனசிங்கை காணவில்லை என அவரது மகன் புகார் அளித்த அன்றே எரிந்த நிலையில் தோட்டத்தில் அவரது உடல் மீட்கப்பட்டது.

காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் மர்ம மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கு தொடர்பாக 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திசையன்விளை சுற்றுவட்டார பகுதி முழுவதும் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
ஜெயக்குமார் மரணம் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இறந்த நிலையில் கிடந்த அவரது உடலின் உறுப்புகள் உடற்கூராய்வில் மிகவும் கவனமாக ஆராயப்பட்டது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இறந்து கிடந்த ஜெயக்குமாரின் குரல்வளை முற்றிலுமாக எரிந்துள்ளது தெரியவந்துள்ளது. இறந்தவரின் உடலை எரித்தால் தான் குரல்வளை முற்றிலும் எரியும் என்பதால் கொன்றுவிட்டு, எரித்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் உடற்கூறாய்வு அறிக்கை சென்னையில் உள்ள உயர் மருத்துவக் குழுவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அவரது கால்கள் கட்டப்பட்டிருந்ததும் வயிற்றின் மேல் பகுதியில் ஒரு இரும்பு தகடு இருந்ததும் உடற்கூறாய்வில் தெரியவந்தது. பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என போலீசார் சந்தேகித்துள்ளனர்.
இந்நிலையில் ஜெயக்குமாரின் எலும்புகள் டி.என்.ஏ பரிசோதனைக்காக மதுரை மண்டல தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது ஜெயக்குமார் தானா என்ற சந்தேகம் அவரது குடும்பத்தினருக்கு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையிலேயே டி.என்.ஏ பரிசோதனைக்கு எலும்புகள் அனுப்பப்பட்டுள்ளன. ஒரு வாரத்திற்குள் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. டிஎன்ஏ அறிக்கை வந்தவுடன் அவரது மகன் மற்றும் மனைவியின் டிஎன்ஏக்களை ஒப்பிட்டு உறுதி செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications