மநீம லோக்சபா தேர்தல் வேட்பாளர்கள் யார் யார்?.. இன்று பொதுக்கூட்டத்தில் அறிவிக்கிறார் கமல்?
திருநெல்வேலி: இன்று திருநெல்வேலியில் கமல்ஹாசன் தலைமையில் நடக்கும் மக்கள் நீதி மய்ய பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் லோக்சபா தேர்தல் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருநெல்வேலியில் இன்று மக்கள் நீதி மய்யம் சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. மிக மிக பிரம்மாண்டமாக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் எல்லோரும் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்று இருக்கிறது. இதை அடுத்த இந்த விழா நடத்தப்பட உள்ளது.
இந்த விழாவிற்காக இன்று காலை கிளம்பி தூத்துக்குடி விமான நிலையத்திற்கு கமல்ஹாசன் செல்ல உள்ளார். அதன்பின் காலையில் இருந்து மதியம் வரை அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளார். இதில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
லோக்சபா தேர்தல் வேட்பாளர்கள் குறித்தும், தேர்தல் கூட்டணி அல்லது தனித்து போட்டி குறித்தும் இதில் ஆலோசிக்க இருக்கிறார். அதேபோல் வேட்பாளர் பட்டியல் ஒன்றும் தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது. பல்வேறு கட்ட தேர்வுகளுக்கு பிறகு இந்த பட்டியல் உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த பட்டியல் இன்று பொதுக்கூட்டத்தில் வெளியிடப்படலாம் என்று கூறுகிறார்கள். அதாவது லோக்சபா தேர்தலில் போட்டியிட போகும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களின் பெயர்கள் இன்று பெரும்பாலும் மாலை பொதுக்கூட்டத்தில் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது. முக்கிய நபர்களுக்கு இந்த தேர்தலில் வாய்ப்பு அழைக்கப்படலாம். மாலை 6 மணிக்கு இந்த விழா நடக்கிறது.