சென்னையே வெள்ளத்தில் தத்தளிச்சது! ஆனா குருக்களின் சம்பளத்தின் மீதே நிர்மலாவுக்கு அக்கறை! கனிமொழி
நெல்லை: நாடாளுமன்றத் தேர்தலைஒட்டி திமுக தொடர் பொதுக் கூட்டங்களை நடத்தி வரும் நிலையில் நெல்லையில் நடந்த கூட்டத்தில் திமுக எம்பி கனிமொழி சில்வண்டு எறும்பு கதை கூறி மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.
தமிழகம் முழுவதும் நேற்று முதல் 3 நாட்களுக்கு திமுக, தொடர் பொதுக் கூட்டங்களை நடத்தி வருகிறது. உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்- பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும் என்ற தலைப்பில் நாடாளுமன்ற தொகுதிகள் வாரியாக பொதுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

ஒவ்வொரு பகுதிக்கும் நேரடியாக சென்று தன்னார்வலர்கள் தொடங்கி, தொழில் நிறுவனங்கள், மக்கள் பிரதிநிதிகள் என அனைவரிடமும் கலந்து பேசி தேர்தல் அறிக்கையில் இடம் பெறக்கூடிய அம்சங்களை அவர்களிடம் இருந்தே பெற்று வருகிறது.
இந்தியாவில் இனி ஜனநாயகம் நீடிக்குமா? தேர்தல் முறை என ஒன்று இருக்குமா ? அரசியல் சட்டம் நிலைக்குமா ? என பல்வேறு கேள்விகளுக்கு விடை அளிக்கும் தேர்தலாக வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தல் இருக்கும் என சமீபத்தில் குறிப்பிட்டு இருந்தார் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.
அந்த வகையில், உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் 'பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்' என்ற முழக்கத்துடன் 16.02.2024, 17.02.2024 , 18.02.2024 என மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் திமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட இருக்கின்றன.
முதற்கட்ட பொதுக்கூட்டங்கள் நேற்று, சிவகங்கை,நெல்லை, விழுப்புரம், தூத்துக்குடி, கடலூர், ஸ்ரீபெரும்புதூர், ஈரோடு, நாமக்கல், கன்னியாகுமாரி, மயிலாடுதுறை, திருவண்ணாமலை ஆகிய 11 மாவட்டங்களில் நடக்கின்றன. இந்த மாவட்டங்கள் முறையே அமைச்சர் இ.பெரியசாமி, கனிமொழி கருணாநிதி எம்.பி., ஆர்.எஸ்.பாரதி, பொன்.முத்துராமலிங்கம், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., திண்டுக்கல் ஐ.லியோனி, பேராசிரியர் சபாபதிமோகன், முனைவர் கோவி.செழியன் ஆகியோர் கலந்து கொண்டு, உரிமைகளை மீட்கும் ஸ்டாலினின் குரலை எதிரொலிக்கிறார்கள்.
அந்த வகையில் நெல்லையில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளரும் எம்பியுமான கனிமொழி பேசுகையில், மத்திய அரசின் திட்டங்கள், மசோதாக்கள் என அனைத்திலும் மாநில உரிமைகளையும் அடையாளங்களையும் அழிக்கக் கூடியதாக இருக்கின்றன.
மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் புரியாத மொழியில் உள்ளன. பிரதமர் பல இடங்களில் திருக்குறளை சொல்கிறார். உலகின் பழமையான மொழி தமிழ் என்கிறார். ஆனால் சமஸ்கிருதத்திற்கும் இந்திக்கும் நிதியை அள்ளி அள்ளிக் கொடுக்கும் அவர்கள் தமிழுக்கு கிள்ளிக் கூட கொடுப்பதில்லை.
பாஜகவுக்கு வாக்களிக்காத மக்களின் நிலை என்னவானாலும் பரவாயில்லை என மத்திய அரசு நினைக்கிறது. மத்திய அரசு நமக்கு எந்த உதவியும் செய்வதில்லை. தொடர்ந்து தடைகளை உருவாக்குகிறார்கள். ஆனால் அந்த தடைகளை எல்லாம் தாண்டி தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக கொண்டு வந்தவர் முதல்வர்.
தேர்தல் பத்திரங்கள் செல்லாது என உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. பாஜகவில் 2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை 6,564 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலம் பெற்றுள்ளது. ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள், மத நல்லிணக்கம் என எதை பற்றியும் கவலைப்படாமல் மத அரசியலை கொண்டு வந்து ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியா கூட்டணி வெற்றி பெறும் நாள் இந்திய நாடு வெற்றி பெறும் நாள். இந்திய கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வர வேண்டும். பாஜக வெற்றி என்பது இந்த நாட்டின் தோல்வி. உத்தரப்பிரதேசத்திற்கு மத்திய அரசு நிதியை அள்ளிக் கொடுக்கிறது. அங்கு பாஜக 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் ஏன் அந்த மாநிலம் வளர்ச்சி பெறாத மாநிலமாக இருக்கிறது என்பதற்கு அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.
சிறிய வயதில் நாம் சில்வண்டு, எறும்பு கதைகளை படித்திருப்போம். இதை நமக்கு சொல்லிக் கொடுத்துதான் வளர்த்திருப்பார்கள். குளிர் காலத்தில் எந்த உணவும் கிடைக்காது என்பதால் எறும்பானது உணவுகளை பத்திரப்படுத்தி வைக்கும். ஆனால் சிக்கடா என சொல்லப்படும் சில்வண்டு எந்த கவலையும் இல்லாமல் எதிர்காலத்தை பற்றியும் சிந்திக்காமல் சுற்றித் திரியும்.
குளிர்காலம் வந்தது, அப்போது எறும்புக்கு உணவு இருந்தது. ஆனால் சில்வண்டு உணவு இல்லாமல் தவித்து கொண்டிருந்தது. இது இயற்கையின் நியதி. அது போல் எறும்பு சேர்த்து வைத்த அத்தனையையும் சில்வண்டிடம் கொடுத்துவிட்டால் எப்படி நியாயமாகாதோ அப்படித்தான் மத்தியில் ஆட்சியாளர்கள் நம்மிடம் இருந்து பறித்து மற்ற மாநிலங்களுக்கு செய்கிறார்கள்.
ஜிஎஸ்டி என்ற பெயரில் எறும்பிடம் இருந்து எல்லாவற்றையும் பறிப்பது போல் நம்மிடம் இருந்து பறித்து மற்ற மாநிலங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்துகிறார்கள். உதவி செய்யலாம் தவறில்லை, தமிழர்கள் என்றுமே தடை சொல்லமாட்டார்கள். ஆனால் மொத்தத்தையும் பறித்துக் கொண்டு சில்வண்டிடம் கொடுத்தது போல் செய்வதை எப்படி நியாயப்படுத்த முடியும். இப்படித்தான் தமிழகத்திற்கு நடந்து கொண்டிருக்கிறது.
சென்னை, நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்தும், நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு அழிவை மக்கள் சந்தித்தனர். சென்னை பாதிப்புகளை பார்வையிட அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், தூத்துக்குடி வெள்ள பாதிப்புகளை பார்வையிட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் வந்திருந்தனர்.
மத்திய நிதியமைச்சர் கோயிலை சுற்றி சகதி இருக்கிறது. இங்குள்ள அர்ச்சகர்களுக்கு என்ன சம்பளம் கொடுக்கப்படுகிறது என்பதைத்தான் கவலையாக கேட்டாரே தவிர வெள்ளத்தால் மக்கள் எத்தகைய பாதிப்பை அடைந்தனர் என்பதை கேட்கவே இல்லை. இவ்வாறு கனிமொழி விமர்சனம் செய்திருந்தார்.












Click it and Unblock the Notifications