திருநெல்வேலியில் 2009ல் வாங்கிய நிலத்தின் இன்றைய மதிப்பு 75 லட்சம்.. சில ஆயிரத்தில் பறித்த கும்பல்
திருநெல்வேலி: திருநெலவேலியில் போலி ஆவணங்கள் தயாரித்து பெண்ணிடம் ரூ.75 லட்சம் நில மோசடியில் ஈடுபட்ட அரசு மருத்துவமனை ஊழியர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சார்பதிவாளர், தாசில்தார் மற்றும் அரசு அலுவலக முத்திரைகள், ஆவணங்களை போலியாக தயார் செய்து நில மோசடிகளில் ஈடுபட்டிருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.. என்ன நடந்தது? எப்படி மோசடி செய்தார்கள் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இன்றைக்கு கொஞ்ச நாள் நிலத்திற்கு பக்கம் போகாமல் இருந்தாலோ அல்லது நிலத்தின் ஆவணங்களை அவ்வப்போது ஆன்லைனில் செக்கிங் செய்யாமலோ இருந்தால் யார் வேண்டுமானாலும் மோசடியில் ஈடுபட்டு நிலத்தை ஆக்கிரமிக்கலாம் என்கிறார்கள். எப்படி நிலத்தை ஆக்கிரமிக்கிறார்கள் என்று பார்த்தால், போலி ஆதார் அட்டை, பொய்யான இறப்பு சான்றிதழ், ஏமாற்றி வாரிசு சான்றிதழ் வாங்குவது, இறந்தவருடைய மனைவி என்று ஏமாற்றி விதவையர் சான்று வாங்குவது அரசு சான்றிதழ்கள் ஏமாற்றி வாங்கி மோசடி செய்கிறார்கள்..

அதேபோல் கூட்டுக்குடும்பத்தில் சிலர் தனது தந்தையின் பெயரில் உள்ள சொத்தை அவர்களுக்கு தெரியாமல் ஏமாற்றி தங்கள் பெயரில் வாங்கி கொள்கிறார்கள். இப்படி பல்வேறு வகையில் ஏமாற்றுகிறார்கள். இந்த மோசடிகள் எல்லாமே இப்போது சர்வ சாதாரணமாக உள்ளது. அதேநேரம் சிலர் சார் பதிவாளர், தாசில்தார் மற்றும் அரசு அலுவலக முத்திரைகள், ஆவணங்களை போலியாக தயார் செய்து நில மோசடி செய்கிறார்கள். அப்படி ஒரு சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்துள்ளது. சுமார் 75 லட்சம் மதிப்புள்ள நிலம் மோசடி செய்யப்பட்டிருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பரப்பாடியைச் சேர்ந்தவர் அலெக்ஸ் ஆல்பர்ட் எட்வர்டு. இவருடைய மனைவி எலிசபெத் ஜார்ஜூக்கு 63 வயது ஆகிறது (வயது 63). எலிசபெத் ஜார்ஜ் திருநெல்வேலி மாநகரம் சிந்துபூந்துறையைச் சேர்ந்த முனியசாமி மகன் சந்திரசேகர் என்பவரிடம் இருந்து பெருமாள்புரம் எல்.கே.எஸ். நகரில் கடந்த 2009-ம் ஆண்டு நிலம் ஒன்றை வாங்கினார்.
இந்த நிலையில் அந்த நிலத்துக்கு சிலர் போலி ஆவணங்கள் தயாரித்து, அங்கு கால்நடை கொட்டகை அமைத்து ஆக்கிரமித்திருந்திருக்கிறார்கள். இதனை கண்ட எலிசபெத் ஜார்ஜ் பாளையங்கோட்டை பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் கடந்த மார்ச் 1-ந்தேதி புகார் கொடுத்தார். அந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.75 லட்சம் என்றும், மோசடி செய்திருப்பதாகவும் குற்றம்சாட்டினார். இதுகுறித்து திருநெல்வேலி பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நெல்லை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் தற்காலிக லேப் டெக்னீஷியனாக வேலை செய்து வரும் தெற்கு வீரவநல்லூரைச் சேர்ந்த 47 வயதாகும் உதயகுமார், 48 வயதாகும் பேட்டை கண்டியப்பேரியைச் சேர்ந்த நாகராஜ் ஆகிய 2 பேரும் சேர்ந்து போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்டு இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் திருநெல்வேலி பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசார் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், 2 பேரும் சேர்ந்து பல்வேறு நில மோசடிகளில் ஈடுபட்டிருப்பதாக தெரியவந்தது. சார்பதிவாளர், தாசில்தார் மற்றும் அரசு அலுவலக முத்திரைகள், ஆவணங்களை போலியாக தயார் செய்து நில மோசடிகளில் ஈடுபட்டிருப்பதை கண்டுபிடித்தனர், இவர்கள் மோசடி செய்வதற்காக தயாரித்து வைத்திருந்த 14 போலி முத்திரைகள் மற்றும் ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் திருநெல்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நிலம் வாங்குவோர் மோசடி நிலமா, வில்லங்கம் உள்ளதா, பட்டா உள்ளதா என்பதை அறிந்து வாங்க வேண்டும்.. அப்படி தெரியாவிட்டால் ரியல் எஸ்டேட் தொடர்பான வழக்கறிஞர்களின் ஆலோசனை பெற்று நிலத்தை முழுமையாக ஆய்வு செய்து வாங்க வேண்டும்.. ஏனெனில் நிலத்தின் மதிப்பு ஏற ஏற மோசடி செய்பவர்களின் தந்திரமும் புதிது புதிதாக அதிகரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications