உங்க பாசத்துக்கு தான்ணே மொத்த கூட்டமும் கட்டுப்பட்டு கிடக்கு! துரை வைகோ பற்றி தொண்டர் நெகிழ்ச்சி!
நெல்லை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் பல ஆண்டுகளாக பணியாற்றியவர் மறுகால் குறிச்சியை சேர்ந்த சேது முத்தையா.
இவர் தற்போது வைகோவிடம் இருந்து வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்கு சென்றுவிட்ட போதும், அவரது மகளுக்கு வங்கியில் வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறார் துரை வைகோ.
எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சிகளை கவிழ்க்க ஒரே பார்முலா!3 ஆண்டுகளில் 4 மாநில அரசுகளை கவிழ்த்த பாஜக!
இது தொடர்பாக உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் பொங்க நன்றி தெரிவித்துள்ளார் சேது.முத்தையா. அதன் விவரம் வருமாறு;
எளிய கிராமம்
''மறுகால்குறிச்சி எனும் கண் விழிக்காத கிராமத்தில் பிறந்த இந்த எளியவனை தன்னோடு வைத்து அழகு பார்த்தவர் அய்யா தலைவர் வைகோ. எங்கள் கிராமத்தில் மட்டுமல்ல; தமிழகமெங்கும் உள்ள, ஏன் உலகெங்கும் உள்ள மறுமலர்ச்சி சொந்தங்கள் மத்தியில் நன்மதிப்பு மரியாதை கிடைக்கின்ற நல்ல வாய்ப்பு கிடைத்ததும் தலைவர் வைகோ அவர்களால் தான். ''
வீடு கட்ட உதவி
''ஒரு மனிதன் வாழ்ந்தான் என்பதற்கு அடையாளமாக, ஒன்று அவன் ஏதாவது நூலினை படைத்திருக்க வேண்டும் அல்லது ஒரு கட்டிடமாவது கட்டியிருக்க வேண்டும். இந்த எளியவன் வாழ்வில் எனது வருங்கால தலைமுறையினரும் எனது பேர் சொல்கிற வகையில், அதற்கான வாய்ப்பினையும், சந்தர்ப்பத்தையும் உருவாக்கி தந்தவர் அய்யா தலைவர் வைகோ அவர்கள் தான். எனை போன்ற ஏழை எளியவர்களின் பெருங்கனவு சொந்த வீடு கட்டுவது தான். நான் மருகால்குறிச்சியில் ஒரு வீடு கட்டுவதற்கு பெரு உதவியாய் இருந்தவரும் தலைவர் வைகோ அவர்கள்தான். உயர்நிலைப் படிப்பை கூட தாண்டாத என் குடும்பத்தில், எனது மகள் பட்டதாரியாக படிப்பதற்கு உற்ற துணையாய் இருந்து உயர்த்தி விட்டவரும் தலைவர் வைகோ அவர்கள் தான்.''
மகளுக்கு வேலை
''எனது மகள் பட்டப்படிப்பை முடித்த நேரம் தலைவர் அவர்களுக்கு சற்று உடல்நிலை சரி இல்லாத காலகட்டம். அப்போது நமது இளந்தலைவர் அண்ணன் துரை வைகோ அவர்கள் கழகத் தோழர்களின் இல்லங்களில் நடக்கின்ற நிகழ்வுகளில் பங்கேற்கின்ற போது, அவருடன் பயணிக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. அது சமயம் நமது இளந்தலைவர் அண்ணன் அவர்கள் எனது குடும்ப விவரங்களை கேட்ட போது இரண்டு பெண்குழந்தைகள். மூத்தவள் விஜயலெட்சுமி பி.எஸ்.சி (வேதியல்) இளங்கலை பட்டம் முடித்து, வங்கி வேலைக்கான பயிற்சியும் முடித்துள்ளாள். அவளுக்கு ஏதாவது வேலைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தால், எனது குடும்ப பொருளாதார சூழ்நிலைக்கு நன்றாக இருக்கும் என கோரிக்கை வைத்தேன்.''
தனியார் வங்கி
''அண்ணன் துரை வைகோ அவர்கள் உடனே தனது அலைபேசி எடுத்து, தனியார் வங்கி ஒன்றில் முக்கியமான பொறுப்பில் இருக்கும் அவரது நண்பரிடம் விபரத்தை சொல்லி எனது மகளின் வேலைக்கு கேட்டுக் கொண்டார். அண்ணன் துரை வைகோ அவர்களுடைய நண்பரும் ஏற்பாடு செய்வதாக உறுதி கூறினார். அண்ணன் அவர்கள், அவரது நண்பரின் அலைபேசி எண்ணை எனக்கு தந்து, என்னை அவரிடம் பேச சொன்னார்.''
நான் பேசவில்லை
''இதற்கிடையில் சில சொந்த வேலை காரணங்களால் தாயகப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு ஊருக்கு வந்து விட்டேன். அண்ணன் அவர்களுடைய நண்பருக்கும் போன் செய்யவில்லை. காரணம் தாயகத்தை விட்டு வந்துட்டோம் இனி மகளுக்கு வேலையும் கிடைக்காது; ஒண்ணும் கிடைக்காது. இனி அவ்வளவு தான் எல்லாமே முடிந்து விட்டது. வாழ்வே சூண்யமாகி விட்டது என இடிந்து நொறுங்கி போய் இருந்ததால், அண்ணன் அவர்களுடைய நண்பரை அழைத்து என் மகள் வேலை சம்பந்தமாக எதுவும் கேட்கவில்லை. விட்டுவிட்டேன்.''
மீண்டும் அழைத்தார்
''இரண்டு மூன்று மாதங்கள் கழித்து அண்ணன் துரை வைகோ அவர்களிடமிருந்து அழைப்பு வந்தது, முத்து உங்கள் வேலை சம்பந்தமாக எனது நண்பரிடம் பேச சொல்லி நம்பர் கொடுத்தேனே பேசினீங்களா? என்றார். நான் இல்லை என்றேன். ஏன் பேசவில்லை என்றார். சும்மா தான் என்றேன். ஓஹோ நாம தாயகத்தை விட்டு வந்துட்டோம். இனி நம்ம மகளுக்கு வேலை கிடைக்காதுனு நினைச்சிட்டீங்க அப்படி தானே? என்னங்க உங்கள நம்பி ஒரு வேலையை ஒப்படைத்தால் ஒழுங்காக செய்ய மாட்டீங்களானு கடுமையாக கண்டித்தார். நீங்க அப்பா கூட இருந்து கஷ்டப்பட்டு இருக்கீங்க. உங்க குடும்பத்துக்கு நான் செய்ய வேண்டிய கடமை இது. (எனக்கோ பதிலே வரவில்லை. மாறாக இருவிழிகளிலும் கண்ணீர் தாரைத்தாரையாக ஓடுகிறது. காரணம் கூடவே இருந்ததாலும் செவிமடுத்து கேட்காத உலகில், வேலையை விட்டு நிறுத்தப்பட்ட ஒருவனின் குடும்பத்தின் மீது அண்ணன் துரை வைகோ அவர்கள் கொண்டுள்ள மனிதநேய பண்பினை நினைத்து கண்ணீர் தாரைத்தாரையாக ஓடி வாயடைத்து நிற்கிறேன். இதனை தற்போது எழுதும் போது கூட எனது விழிகள் நனைந்தது.) இதகூட நீங்க ஒழுங்காக செய்யலனா எப்படி என்று மீண்டும கடுமையாக கடிந்து கொண்டார்.''
நிரந்தர பணி
''இல்லண்ணே உடனே பேசுறேன். நீங்க ஒண்ணும் பேச வேண்டாம். போனை வைங்க எனச் சொல்லி போனை கட் செய்து விட்டார். அடுத்து அரை மணித்திற்குள் அண்ணன் துரை வைகோ அவர்களின் நண்பரிடமிருந்து எனக்கு போன் வருகிறது. உங்கள் மகளின் புரொபைலை எனக்கு முதலில் வாட்ஸ் அப்பில் அனுப்பி வையுங்கள். ஆகஸ் 23 2021 அன்று உங்களுடைய மகளை சென்னையிலுள்ள அலுவலகத்தில் தற்காலிக பணியில் சேர சொல்லுங்கள் என்றார். இன்றோடு தற்காலிக பணிமுடிந்து நாளை முதல் 01.07.2022 நிரந்தர பணியில் சேருகிறாள்.''
மொத்த கூட்டமும்
''அண்ணே இந்த ஒத்த பாசத்துக்கு தான்ணே மொத்த கூட்டமும் கட்டுப்பட்டு கிடக்கு. தலைவர் அய்யா வைகோ அவர்களின் மனிதநேய பாசம் உங்க குருதி ஓட்டத்துல கலந்து இருக்குறதுனால தான், அவரை தொடரந்து எங்க சுமைகளை தாங்கி பிடிக்க நீங்க வரணும்னு ஏங்கி தவிக்கிறோம். என் மகள் பாக்கியசாலி. தங்களின் வாழ்த்தோடு மென்மேலும் வளருவாள்.தங்களின் திருக்கரங்களால் திருமணம் நடத்தி வைக்க பெற்று இல்லறம் எனும் நல்லறம் பேணப் பெறுவாள். என்றென்றும் நன்றி உணர்வோடு'' -சேது முத்தையா